Skip to main content

ஹாய்....17.12.2010!



ஓராயிரம் நிகழ்வுகள் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதில் அவ்வப்போது சடென் பிரேக் போட்டு வாழ்க்கையை நின்று நிதானித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நிறுத்தம் தேவை இடை இடையே...அப்படிப் பட்ட நிறுத்தங்கள் ஒரு முறை நாம் எங்கிருந்து வந்தோம் என்றும் எங்கு நிற்கிறோம் என்று மெல்லிய உணர்தலை வலுவாகக் கொடுத்து ஒரு வித புரிதலை கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால் யாரும் நின்று நிதானிப்பதுதான் கிடையாது ஓட்டம்.. ஓட்டம்...ஓட்டமோ ஓட்டம்.

குறிப்பாக இந்த பதிவுலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்த வருடத்தின் மார்ச்சு மாதவாக்கில் எழுத வந்தேன். எனக்காகவே எழுத ஆரம்பித்தேன் அல்லது எழுதிப் பார்த்தேன் இன்னும் அப்படித்தான் எனக்காகவே எழுதுகிறேன் மற்றும் எழுதிப்பார்க்கிறேன்.

இது எனக்குள் உள்ள விசயம் அது. அகத்தில் இருக்கும் விசயங்கள் எப்போதும் மாறுவது இல்லை. சிறுவயதில் உணரப்பட்ட அந்த உள்முனைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறது. அது ஆடுவதில்லை அசைவதில்லை ஒரு வித ஸ்திரத்தன்மையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. அதற்குக் கவலைகள் இல்லை மேலும் கற்பனைகளும் இல்லை அசைவற்ற அந்தப் பெருஞ்சக்திதான் நம்மை வழி நடத்துகிறது என்பது கூர்ந்து நோக்கினால் உணர முடியும்.

யார் கூர்ந்து நோக்குவது நமக்குத்தான் நேரமில்லையே... ..துரித கதியில் இயங்கும் இந்த உலகத்தில் அடுத்த மனிதர்களைப் பற்றிப் பேசவே நமக்கு நேரமில்லை. அப்புறம் எங்கே நம்மை நாம் உற்று நோக்குவது.... நடக்காத காரியமாய்க் குதிரைக் கொம்பாய்ப் போய் விடுகிறது மனிதர்களுக்கு...!

உள்ளே இருக்கும் உள் முனைப்புதான் இப்படி இருக்கிறது ஆனால் புறத்தில் எல்லாம் மாறிப் போய் விடுகிறது. ஆமாம் காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுக் கொண்டும் ஆனால் ஏதோ ஒரு மாறாத ஒன்றை தன்னிடம் வைத்துக் கொண்டும் இருக்கிறது. இதுதான் பிரபஞ்ச சூத்திரம்.

புறத்தில் உடலில் மாற்றம், சுற்றியுள்ள சூழலில் மாற்றம் என்று எல்லாம் மாறிப் போவதற்கு மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாகிப் போகின்றன. ஆனால் மனிதன் செயல்பட முடியாத இடம் மாற்றியமைக்க முடியாத இடம் அவனது மனமும் அதைத் தாண்டிய உள் முனைப்பு என்று சொல்லக்கூடிய அவனின் ஆத்ம சொரூபமும்தான்.....

ஏனென்றால் அங்கே செயல்கள் செல்லுபடியாவதில்லை..அது செயலற்ற ஒரு இடம். அங்கே போன மாத்திரத்தில் செயல்கள் எல்லாம் நின்று விடுகின்றன. நினைவுகள் அற்ற அந்த இடம் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு ஒரு அக்னியைப் போல அதைத் தொட்டவுடன் நாமும் அதாகிப் போகிறோம். பின்னே பிரித்தறிய ஒன்று இல்லாமல் போய் விடுகிறது.

செயலற்ற இடத்திலிருந்து பிறக்கும் செயல்கள் சக்தி மிகுந்தவை. உலகின் ஆக்கங்கள் எல்லாம் அங்கிருந்து வந்தவை. உள்ளிருக்கும் அந்த உள்முனைப்பு சக்தியைப் பரப்பி மூளைக்குள் விரவிப் பரவி சக்தியைத் தூண்டி சிந்திக்கவும் செயல்படவும் செய்கிறது. இரத்தத்தினை உடல் முழுதும் ஓடச்செய்து இதயத்திற்கு சரி விகிதம் கொடுத்து அழுத்தம் கொடுத்து மற்ற இயக்கங்களுக்கு உறுதுணையாய் இருக்கிறது.

உடலின் இயக்கத்திற்கு அறிவியல் கொடுக்கும் எல்லா விளக்கத்திற்கும் பின்னால் நிற்பது இந்த பெருஞ்சக்திதான். மனிதர்களின் பயன்பாடுகளை அவர்களின் மனம் நிர்ணயம் செய்வதால் அந்த குரங்காட்டத்தில் இந்தப் பெரும் சக்தி பெரும் விரையம் ஆக்கப்படுகிறது......

அப்படி பெருமளவில் எனது சக்தி உபோயோகம் செய்யப்படும் இடமாக எனது உத்தியோகமும், எனது எழுத்தும் இருக்கிறது. உத்தியோகம் என்னளவில் உபோயோகம் கொடுக்கக் கூடியது அதன் பயன்பாடுகளு என்னளவில் என் குடும்பம் அளவில் சரிதானே....! ஆனால் எழுத்து என்று வரும் போது அது நிறைய பேரோடு தொடர்பு கொண்டது என்பதை உணராமலேயேதான் என் போக்கில் எழுதி வந்திருக்கிறேன்....டக்கென்று ஒரு கட்டத்தில் ... நான் நின்று நிதானிக்கும் இக்கணத்தில் மிகப்பெரிய உண்மைகள் மெலிதாய் என்னுள் சிலிர்த்து எழுகின்றன......

எழுத்துக்களை சக பதிவர்கள் மட்டும் வாசிப்பதில்லை மேலும் இங்கே அளிக்கபப்டும் பின்னூட்டங்களும், வாக்குகளும் தரவரிசைகளும் ஹிட்ஸ்களும் மிகப்பெரிய மாயை அதன் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதும் மாயை என்பதையும் தெளிவாக உணர முடிந்தது.

பதிவுலகம் சாராமல் வாசிக்கும் நண்பர்களின் விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும், சொந்த விசயங்களையும் தன்னுடைய உறவாய் என்னிடம் மின்னஞ்சல்கள் மூலம் பகிர்ந்து கொள்வதைக் காணும் போது ஒரு மிகப்பெரிய பொறுப்பு எழுதுபவனுக்கு வேண்டும் என்ற உண்மை எனக்குப் பலமாகவே உறைத்தது.

எழுத்து என்பது வாசிக்கும் மனிதர்களின் கண்களில் பரவி இதயம் துளைத்து மூளையில் நல்ல நினைவுகளைப் பரப்பிச் செல்லவேண்டும். மேலும் எழுதும் எழுத்துக்களின் போக்கு ஒரு விரிந்த பார்வை கொண்டதாகச் சமுதாயம் விவரித்து வைத்திருக்கும் எல்லா கட்டுக்களையும் உடைத்ததாகவும் எல்லா மனிதர்களுக்கும் பயனளிக்கும் வகையிலிருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மேலோங்கியிருக்கிறது.

ஏதோ ஒரு பத்து பதிவுகள் எழுதினோம் இருபது பேருக்குக் கமெண்ட் போட்டோம் 40 பேர் வாக்களித்தார்கள் 50 பின்னூட்டம் வந்துவிட்டது என்ற அளவில் திருப்திபட்டுக் கொள்வது ஒரு மட்டுப்பட்ட நிலை.

மிகையான மனிதர்கள் வாசித்து விட்டு மெளனமாய்ச் சென்று சமய சந்தர்பங்களில் மின்னஞ்சல்களில் தமது சந்தோசத்தைத் தெரிவிக்கும் போது இங்கே எழுத்து என்பது விளையாட்டாகத் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான களம், காழ்ப்புணர்ச்சிகள் தாண்டி மனிதர்களைச் செம்மைப்படுத்துவதோடு தானும் செம்மைப்பட்டுப் போகும் நிகழ்வுகள் அரங்கேறும் ஒரு அட்டகாசமான தளம்.

எழுதும் மனிதர்களின் பொறுப்புணர்ச்சி ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும். அது மனிதர்களை மகிழ்விக்கவேண்டும். சந்தோசமாய் ஒரு கிளர்வுற்ற சிந்திக்கும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். என்னைத் தொடரும் அத்தனை நண்பர்களும் வெறும் காமெடி அல்ல....

அவர்கள் நான் ஏதோ எழுதுகிறேன் என்ற எண்ணத்தில் நேரம் கிடைத்தால் வாசிக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடருபவர்கள். வேண்டுமானால் சிலர் கமர்சியல் காரணங்களுக்காகத் தொடரலாம். ஆனால் அப்படி குறைந்த பட்சம் என்னைத் தொடருபவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.

ஏனென்றால்...எனக்குக் கொடுத்து வாங்குதலில் நம்பிக்கை இல்லை. கொடுப்பேன்..நல்ல கட்டுரைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் வலைத்தளங்கள் உணர்வுளைத் தூண்டும் கவிதைகள் என்று என் ப்ரியத்தில் கொடுப்பேன்.

எதிர்மறை கருத்துக்களைச் சொல்லியும் பரபரப்புச் செய்திகளை உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளையும் மனிதர்களுக்குக் கொடுப்பது ஒருவகை, இன்னும் காமம் சார் நிகழ்வுகளை சிரிப்பாகவும், சினிமா செய்திகளைச் சூடாகவும் கொடுக்கவும் செய்தால் ஹிட்ஸ்கள் கூட வரும்...கூட்டமும் வரும்....

ஆனால் அதற்கு நிறைய சிறப்பான அனுபவமும், நோக்கும் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்...அதை நானும் செய்ய விரும்பவில்லை.....!

மனிதர்களின் மனங்கள் விசாலப்பட்டுப் பார்வைகளும் சிந்திக்கும் சக்தியும் அதிகரித்து மாயைகள் ஒழிய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலும் எழுத்தின் ஓட்டத்தோடு வாசித்து அர்த்தங்களை விளங்கி கொண்டு என்னை ஊக்குவித்து வரும் அத்தனை அன்பான உறவுகளுக்கும் இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.

எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்.........

மீண்டும் சந்திப்போம் அடுத்த...ஹாய் பகுதியில்......


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.....!


தேவா. S

Comments

//ஏனென்றால்...எனக்குக் கொடுத்து வாங்குதலில் நம்பிக்கை இல்லை. கொடுப்பேன்..நல்ல கட்டுரைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் வலைத்தளங்கள் உணர்வுளைத் தூண்டும் கவிதைகள் என்று என் ப்ரியத்தில் கொடுப்பேன்.//

இந்த வரிகள் உங்கள் மீதான மதிப்பை இன்னும் அதிகமாக்குகிறது!
//எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்.//
அருமை
எவ்வளவு பெரிய பதிவு படிச்சிட்டு ரெண்டு நல கழிச்சு கமெண்ட்ஸ் போடுறேன் ......
எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்.........//

எவ்வளவு அருமையான வரிகள்!
VELU.G said…
நல்ல நிலை
என்னை மேலும் உணர்வுப்பூர்வமாக தாக்கிய உங்களின் இன்னொரு பதிவு இது! பதிவும் பதிவு எழுதுபவரும் எப்படி இருக்க வேண்டும் என்று இது எனக்கு உணர்த்துகின்றது!
தேவா ....... கிரேட்............ உங்க எண்ணங்களை , உங்கள் விருப்பங்களையும் தெளிவா சொல்லிட்டிங்க ....... சுட்டுப் போட்டாலும் எனக்கு இந்த மாதிரி யோசிக்கவோ ..... எழுதவோ வராது ........... வாழ்த்துக்கள்
எஸ்.கே said...

என்னை மேலும் உணர்வுப்பூர்வமாக தாக்கிய உங்களின் இன்னொரு பதிவு இது! பதிவும் பதிவு எழுதுபவரும் எப்படி இருக்க வேண்டும் என்று இது எனக்கு உணர்த்துகின்றது!///

இல்லை எஸ்.கே இது அவருடைய விருப்பத்தை மட்டுமே சொல்லி இருக்கிறார் ..... யாரையும் பாலோ பண்ண சொல்ல வில்லை அதே போல ..... மாற்றுச்சிந்தனையாளர்களையும் தவறென்று கூறவில்லை
//இல்லை எஸ்.கே இது அவருடைய விருப்பத்தை மட்டுமே சொல்லி இருக்கிறார் ..... யாரையும் பாலோ பண்ண சொல்ல வில்லை அதே போல ..... மாற்றுச்சிந்தனையாளர்களையும் தவறென்று கூறவில்லை..//

அவர் அப்படி சொல்லவில்லைதான் ஆனால் அவரின் வார்த்தைகள், நானும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என எனக்கு தோன்ற வைக்கிறது!
உள்ளத்தில் உள்ளதை வார்த்தைகளாய்..

நன்றி நண்பரே
எஸ்.கே said...

//இல்லை எஸ்.கே இது அவருடைய விருப்பத்தை மட்டுமே சொல்லி இருக்கிறார் ..... யாரையும் பாலோ பண்ண சொல்ல வில்லை அதே போல ..... மாற்றுச்சிந்தனையாளர்களையும் தவறென்று கூறவில்லை..//

அவர் அப்படி சொல்லவில்லைதான் ஆனால் அவரின் வார்த்தைகள், நானும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என எனக்கு தோன்ற வைக்கிறது!///

ok ok.....
//காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுக் கொண்டும் ஆனால் ஏதோ ஒரு மாறாத ஒன்றை தன்னிடம் வைத்துக் கொண்டும் இருக்கிறது. இதுதான் பிரபஞ்ச சூத்திரம்//

ம்ம்...மிகவும் ஆழ்ந்து இந்த வரிகளைச் சிந்தித்துப் பார்த்தேன். Men may come; Men may go! உலகம் இயங்கிக்கொண்டே இருக்கிறது...!! என்ன புதிரோ இது.
//எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்........//
Nice lines :)
//மிகையான மனிதர்கள் வாசித்து விட்டு மெளனமாய்ச் சென்று சமய சந்தர்பங்களில் மின்னஞ்சல்களில் தமது சந்தோசத்தைத் தெரிவிக்கும் போது இங்கே எழுத்து என்பது விளையாட்டாகத் தெரியவில்லை.//

Wonderful...
//எனது எழுத்துக்கள் வாசகரின் கையில் தவழ்ந்து கண்ணில் பதிவது. அது முள்ளாய் இருப்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை மாறாக, சந்தோசம் தரும் ஒரு மலராக இருப்பதையே விரும்புகிறேன்.........//

உண்மையான... அருமையான... வரிகள்!
உள்ளேன் ஐயா...
ஒண்ணுமே புரியலை. அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.....!
வைகை said…
எழுதும் மனிதர்களின் பொறுப்புணர்ச்சி ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும். அது மனிதர்களை மகிழ்விக்கவேண்டும்.///////

உண்மைதான் தேவா!!
Chitra said…
மனிதர்களின் மனங்கள் விசாலப்பட்டுப் பார்வைகளும் சிந்திக்கும் சக்தியும் அதிகரித்து மாயைகள் ஒழிய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலும் எழுத்தின் ஓட்டத்தோடு வாசித்து அர்த்தங்களை விளங்கி கொண்டு என்னை ஊக்குவித்து வரும் அத்தனை அன்பான உறவுகளுக்கும் இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.


.......வாசகர்களின் திருப்திக்காக எழுதுவது - ஒன்று;
எழுத்தாளரின் ஆத்ம திருப்திக்காக எழுதுவது ஒன்று.
எதற்காக எழுதுகிறோம் என்று தெளிவாக சிந்தித்து சொல்லி இருப்பதே உங்கள் மனப் பக்குவத்தை காட்டுகிறது. பாராட்டுக்கள்!
ஹேமா said…
எழுதுவது அல்லது மனச்சிக்கலகளையோ சந்தோஷங்களையோ நெருடல்களையோ கிறுக்குவது பற்றி அருமையான மன வெளிப்பாடு.
நீங்கள் சொன்ன எல்லாவற்றோடும் நானும் ஒத்துப்போகிறேன் தேவா !
ஆமினா said…
//இது ஒரு அற்புதமான களம், காழ்ப்புணர்ச்சிகள் தாண்டி மனிதர்களைச் செம்மைப்படுத்துவதோடு தானும் செம்மைப்பட்டுப் போகும் நிகழ்வுகள் அரங்கேறும் ஒரு அட்டகாசமான தளம்.//

சரியா சொன்னீங்க
உள்நோக்குப் பார்வையை வலியுறுத்திச் சொன்ன பதிவு இது தேவா. நிறைய சிந்திக்க வைத்தது...நன்றி.
///மிகையான மனிதர்கள் வாசித்து விட்டு மெளனமாய்ச் சென்று சமய சந்தர்பங்களில் மின்னஞ்சல்களில் தமது சந்தோசத்தைத் தெரிவிக்கும் போது இங்கே எழுத்து என்பது விளையாட்டாகத் தெரியவில்லை.///

உங்க பதிவு, நிறைய பேரை சென்றடைந்ததற்கு இதுவே சான்று.. :-)

ஒரு பதிவு படிச்சா.. ஒண்ணு சிந்தனையை தூண்டுவதாய் இருக்கணும், இல்ல சிரிக்க வைக்கலாம், அட அதுவும் இல்லன்னா.. ஏதோ, ஒரு உணர்வாச்சும் வர வைக்கணும்..

நாமளும், எழுதுறோம்னு பேருக்கு எழுதாம... ஒவ்வொரு பதிவிலும், உங்க தனித்திறன் வெளிப்படுத்துறீங்க.. தேவா..

நீங்க உங்களுக்காக எழுத ஆரம்பிச்சது, எங்க எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.. உங்க இலக்கை தொடர்ந்து அடைய வாழ்த்துக்கள்..!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த