Skip to main content

இரவு...!
















இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை.

ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய்.

எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது.

இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்து சொந்தங்களாய்... கண் சிமிட்டி அழைக்கும். பெரும்பாலும் சூரியன் தொலைத்த பூமி...உஷ்ணத்தை விழுங்கி விட்டு..சிலிர்ப்பாய் குளிர் சிரிப்பு சிரிக்கும். ஏதேதோ மெல்லிய சப்தங்களையும் துல்லியமாய் கொண்டு வந்து காது சேர்க்கும்.

ஆமாம் இரவு தன்னிடம் தேக்கி வைத்திருப்பது....பிரபஞ்சத்தின் மூலத்தை. உறக்கம் கலைத்து அல்லது கலைந்து வெறுமையாய் இருக்கும் ஒரு கணம்...அந்த கணம் எப்போது நிகழும் என்று என்னால் வரையறுத்துக் கொடுக்க இயலாது...ஆனால் எதிர்பார்ப்புகள் தொலைத்த ஒரு அற்புத கணத்தில் ஆச்சர்யமாய் தனது இருப்பினை நம்மீது போர்த்தி கண் சிமிட்டி....நலமா என்று நலம் விசாரிக்கும் அற்புத இரவு.

பெரும்பாலும் இரவுகள் இங்கே அலைக்கழிக்கப்படுகின்றன...அல்லது அயற்சியில் உறங்கி விழுங்கப்படுகின்றன. காமத்துக்கும், கனவுக்குமே பயன் பட்டு பயன் பட்டு மழுங்கிப் போய் கிடக்கிறது இரவு எல்லோரின் மனதிலும். வாரத்தில் ஒரு நாள்... வேண்டாம்....மாதத்தில் ஒரு நாள் தனியாய் எதிர் கொள்ளுங்கள் இரவை....காதலோடு...

துணை வேண்டாம்; இசை வேண்டாம்; வாசிக்க புத்தகமும் வேண்டாம்....சுற்றியுள்ள சூழலும் நீங்களும்.அவ்வளவே.....! அன்றைய தினத்தின் அயற்சிகள் எல்லாம் அழுக்குகளாய் நகர்ந்து போக உலகத்தின் மிகைகள் உறங்கி கொண்டிருக்க நீங்கள் விழித்திருங்கள்.....இரவை நீங்கள் நடத்துங்கள்...அப்படி நடத்த இரவோடு இரவாக கலந்து போகுங்கள்....

சப்தங்கள் கழிந்து
ஒரு மோன நிலையில்
எப்போதும் ஆழ்த்தும் இரவு....
மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!

ஆமாம்.. இரவு எப்போதும் கவனங்களைச் சிதறவிடுவதே இல்லை...முன்பே சொன்னது போல தாயின் கருவறைக்குள் அசைவுளற்று விழித்திருக்கும் குழந்தையாய்..காத்திருக்கும் பொழுது சட்டென்று மூளைக்குள் இறைத்துப் போடுகிறது இரவு..ஓராயிரம் கவிதைகளை...! யாருமே இல்லாமல் வெறுமனே காதல் உணர்வினை புட்டியில் வைத்து ஊட்டும் பால் போல புகட்டுகிறது அந்த ஆழ்ந்த கருமை....

உன் உதடுகள்
உச்சரிக்கின்றனவா?
இல்லை என்னை...
காதல் செய் என்று
எச்சரிக்கின்றனவா?

பளீச்சென்று வந்து விழுந்த வார்த்தைகளுக்குப் பின்னால் எந்த உருவமும் இல்லை ஆனால் ஒரு மேலோங்கிய உணர்வை எனக்குள் ஊற்றியதின் பின்னணியில் இருந்தது...ஆழமான இரவு..... ! உருவமற்ற இறை என்ற ஆன்மீக உச்சத்தின் சாயலன்றி இது வேறு என்ன?

பல நேரங்களில்...
பார்வைகளிலேயே
சொல்லி விடுகிறாள்..
தீர்வுகளை...!
வாசிக்க முடியாமல்
அவள் விழிகளுக்குள்ளேயே
மீண்டும் மீண்டும்
வழுக்கி விழுகிறேன்...!

நிசப்தத்திலிருந்து நீண்டு வந்த வார்த்தைகளில் பொருளில்லை ஆனால் உணர்விலிருந்து...! அந்தக்கணத்தில் லயித்துக் கிடக்க எண்ணங்கள் அலைமோதும் மனிதர்கள் இல்லை.. என் எண்ணங்கள் எல்லாம்...அழிந்து ஒழிந்தும் போயிருந்தது..!

ஒரு ஓவியம்..தன்னைத்தானே
சரி செய்து கொள்ளுமா...
ஆமாம் நீ கூந்தல்
ஒதுக்கினாயே... சற்று முன்னால்...

எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த போது சட்டென்று வந்து விழுந்து என்னை மிரட்டிவிட்டு ஓரமாய் ஒளிந்து நின்று என்னைப்பார்த்து புன்னகை செய்த வரிகளை அனுபவிக்க ஆனந்த இரவு அட்டகாசமாய் உதவியது.

உன் வார்த்தைள் எல்லாம்
என் கவனத்தில்
சேர்வதற்கு பதிலாக
என் நினைவுகளை
அல்லவா அழிக்கிறது!

வார்த்தைகளாய் ஏதோ ஒன்று சொல்கிறாள் காதலி...அல்ல அல்ல வார்த்தையை மாற்றுங்கள் இங்கே.. ஏதோ ஒன்று சொன்னது காதல் அந்த வார்த்தைகள் நினைவுக்குள் போய் சேர்ந்து ஏதோ புரிய வைப்பதற்கு பதிலாக.. ஏற்கனவே நினைவுப்பகுதிகளை...எல்லாம அடித்து துவம்சம் செய்து..ஒன்றுமில்லாமல் செய்கிறது...........

நான் மெல்ல சிரித்து..என்ன என்பதுபோல இரவினைப் பார்க்க..அது ஏதேதோ சொல்லும் என்று நினைத்த எனக்கு மீண்டும் அடர்த்தியான மெளனம் கிடைத்தது....! ஆமாம் மனிதர்கள் உறக்கத்தில் நல்ல கனவுகளுக்காக போராடிக் கொண்டிருப்பார்கள் எனக்கு..விழிப்பு நிலையில் கனவுகளை எல்லாம் அற்புதமாய் கொட்டியிறைத்துக் கொண்டிருந்தது இரவு...

உறக்கமற்ற
கடந்து போன இரவின்
நீட்சியில் நகர்ந்தது
இன்றைய பகல் முழுதும்...

தொடர்ந்த திருப்தியான..
நிமிடங்கள் கொடுத்த
திருப்தியில் மறந்தே
போனது உலகமும்; உறக்கமும்;

மிச்சமிருந்த
வார்த்தைகள் எல்லாம்
பிடிவாதம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன...
மீண்டும் இரவிடம் போய்
எங்களையும் கொட்டிவிடு...என்று...!

வாழ்வின் பக்கங்களுக்கு ஒளி எவ்வளவு முக்கியமோ அத்தனை சமமாக இருளும் முக்கியம்...இருளை விலக்காதீர்கள்...இரவை நொறுக்காதீர்கள்...அருமையான இரவுகளை அற்புதமாய் பருகுங்கள். பிரபஞ்சத்தின் நியதிகள் எல்லாம் அருமையானவை...அதை சிக்காலாக்கி கொள்வது மனிதன்...!

அற்புதமான உங்களின் ஆனந்த இரவு அனுபவத்திற்கு எனது வாழ்த்துக்கள்....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா...!


தேவா. S

Comments

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
இரவின் இனிமையான பக்கம்!
ஆனால் இரவிற்கு இன்னொரு கொடுமையான பக்கமும் உள்ளது!
ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள்!
அழகாக எழுதி இருக்கறீங்க.. ரொம்ப ரசித்தேன்...
ராத்திரி தூங்காம இருந்தா இப்படிதான் கண்ட படி யோசிக்க தோனும் :-)
Anonymous said…
//எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய்//

எப்படி இப்படில்லாம் :)

//இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்//

நானும் கூட..

//மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!//

Great Dheva!!

//உன் உதடுகள்
உச்சரிக்கின்றனவா?
இல்லை என்னை...
காதல் செய் என்று
எச்சரிக்கின்றனவா?//

கலக்கல் :-)

//அவள் விழிகளுக்குள்ளேயே
மீண்டும் மீண்டும்
வழுகி விழுகிறேன்...!//

கற்பனை அழகு தேவா. (வழுக்கி விழுகிறேன்னு வரனுமோ)

//ஒரு ஓவியம்..தன்னைத்தானே
சரி செய்து கொள்ளுமா...
ஆமாம் நீ கூந்தல்
ஒதுக்கினாயே... சற்று முன்னால்...//

ஓவிய வரிகள்!!

//இருளை விலக்காதீர்கள்...இரவை நொறுக்காதீர்கள்...அருமையான இரவுகளை அற்புதமாய் பருகுங்கள். பிரபஞ்சத்தின் நியதிகள் எல்லாம் அருமையானவை...அதை சிக்காலாக்கி கொள்வது மனிதன்...!//

நிதர்சனம்ம் தேவா.. கவிதையான படைப்பு.
Kousalya Raj said…
//உன் வார்த்தைள் எல்லாம்
என் கவனத்தில்
சேர்வதற்கு பதிலாக
என் நினைவுகளை
அல்லவா அழிக்கிறது!//

இது கொஞ்சம் டேஞ்சர்....மெமரி லாஸ் ஆகிவிட போகிறது...! :))

கவிதைகள் பல இரவில் தான் தோன்றுகின்றன.....!

நிலவின் மடியில் தான் சிறந்த காவியங்கள் பிறக்கின்றன...!

சிலரை இரவு உறங்க வைக்கிறது பலரை எழுப்பிவிடுகிறது...!

ரசித்தேன்
//வாழ்வின் பக்கங்களுக்கு ஒளி எவ்வளவு முக்கியமோ அத்தனை சமமாக இருளும் முக்கியம்...இருளை விலக்காதீர்கள்...இரவை நொறுக்காதீர்கள்...அருமையான இரவுகளை அற்புதமாய் பருகுங்கள். பிரபஞ்சத்தின் நியதிகள் எல்லாம் அருமையானவை...அதை சிக்காலாக்கி கொள்வது மனிதன்...!//

தெளிவாகவும் மிகச் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை சார்,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பகிர்வுக்கு நன்றி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்
//வாரத்தில் ஒரு நாள்... வேண்டாம்....மாதத்தில் ஒரு நாள் தனியாய் எதிர் கொள்ளுங்கள் இரவை....காதலோடு...//

உண்மைதான் அண்ணா ., அதிலும் அதுக்கு கீழ நீங்க சொல்லி இருப்பது கலக்கல்.!
யாருமற்ற தனிமையான பௌர்ணமி இரவு , கூடவே கோடான கோடி நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டே வாழ்கையின் எந்த நினைவுகளும் இன்றி எந்த சிந்தனைகளும் இல்லாமல் ரசிப்பது ரொம்ப அருமையா இருக்கும் அண்ணா ..!!
ரசித்து எழுதியிருக்கிறீர்கள்!
200(follower) vathu idam enakkuthan.......
'இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்து சொந்தங்களாய்... கண் சிமிட்டி அழைக்கும். பெரும்பாலும் சூரியன் தொலைத்த பூமி...உஷ்ணத்தை விழுங்கி விட்டு..சிலிர்ப்பாய் குளிர் சிரிப்பு சிரிக்கும்."

அட்டகாசமான‌ கவிதை வ‌ரிகள்!

ஏனோ பாரதியின்
" மோனத்திலிருக்குதடி இவ்வையகம் மூழ்கித் துயிலினிலே!
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்திலுழலுவதோ?"
என்ற கவிதை வ‌ரிகள் நினைவுக்கு வந்தன‌!

அருமையான சிந்தனைக்கு ஒரு பூங்கொத்து!!‌
எழுத மற‌ந்து விட்டேன். புகைப்படம் மிக அழகு!
உங்களின் எண்ண‌ங்களை அப்படியே பிரதிபலிக்கிறது!!
//சப்தங்கள் கழிந்து
ஒரு மோன நிலையில்
எப்போதும் ஆழ்த்தும் இரவு....
மனச்சிறகுகள் விரிய விரிய
தடைகளின்றி நீள்கிறது
என் வானம்..!//

ஊர் அடங்கும் நேரம்...
உமது உள்மனம் மட்டும் கவி பாட...


//உன் உதடுகள்
உச்சரிக்கின்றனவா?
இல்லை என்னை...
காதல் செய் என்று
எச்சரிக்கின்றனவா?//

உச்சரிக்கும் வார்த்தைகள்
எச்சரிக்கை செய்வதென்றால்
பத்திரிக்கை அடிக்க
வேண்டியது தானே...!

//உருவமற்ற இறை என்ற ஆன்மீக உச்சத்தின் சாயலன்றி இது வேறு என்ன?///

ஹ்ம்ம் கும்ம்.. அதானே பார்த்தேன்... :D :D


//பல நேரங்களில்...
பார்வைகளிலேயே
சொல்லி விடுகிறாள்..
தீர்வுகளை...!
வாசிக்க முடியாமல்
அவள் விழிகளுக்குள்ளேயே
மீண்டும் மீண்டும்
வழுக்கி விழுகிறேன்...!//

பார்வைகளின் ஸ்பரிசங்கள்
புரிந்து வழுக்கி விழுந்தா பரவாயில்ல.. புரியாம விழுற மாதிரி இல்ல இருக்கு...!
சரி போனா போகுது.. இன்னொரு முறை.. நல்ல கவனமா வாசிங்க பாக்கலாம்.. :-)


//ஒரு ஓவியம்..தன்னைத்தானே
சரி செய்து கொள்ளுமா...
ஆமாம் நீ கூந்தல்
ஒதுக்கினாயே... சற்று முன்னால்...//

காதலி ஓவியமாய்
நீங்கள் கவிஞனாய்... சூப்பர்... :-)

//உன் வார்த்தைள் எல்லாம்
என் கவனத்தில்
சேர்வதற்கு பதிலாக
என் நினைவுகளை
அல்லவா அழிக்கிறது!///

ஆஹா.. பாவம் அவுங்க நீங்க கவனிச்சு கேட்டுட்டு இருக்கிங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க..
நீங்க என்னடான்னா, உள்ளதும் போச்சுடா.. ரேஞ்சில பேசிட்டு இருக்கீங்க.. :-)

//உறக்கமற்ற
கடந்து போன இரவின்
நீட்சியில் நகர்ந்தது
இன்றைய பகல் முழுதும்...//

தூக்கமில்லா இரவின் நீட்சி...
உங்கள் பகல் நேர கவிதைகளின் சாட்சி... :)

//மிச்சமிருந்த
வார்த்தைகள் எல்லாம்
பிடிவாதம் பிடித்துக்
கொண்டிருக்கின்றன...
மீண்டும் இரவிடம் போய்
எங்களையும் கொட்டிவிடு...என்று...!//

சரி ரைட்ட்டு... அவுங்கள கொண்டு போய் இரவிடம் சேர்த்துட்டு..
நீங்களும் போயி தூங்குற வழிய பாருங்க.. :-))

ரசனையான பகிர்வு...! :-))
எப்பவும் ராத்திரி நேரம் தனியா உக்காந்து, ஆன்மா.. ஆத்மா-ன்னு பேசுவீங்க...

இப்போ... ஒவ்வொரு வரியும் உங்களுடன் சேர்ந்து ரசிக்க முடிந்தது :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல