Skip to main content

ஹாய்......25.01.2011!



















காலங்கள் நகர, நகர அனுபவம் என்பது சேர்ந்து ஒரு வித புத்தி முதிர்ச்சியை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஒரு வித கூர்மையான உள்முனைப்போடு வாழ்க்கை நகரும் போது இன்பம், துன்பம் எல்லாமே சேர்த்து வைத்து பார்க்கும் ஒரு பக்குவம் கை கூடி விடுகிறது. எது நடந்தாலும் அது ஒரு வித காரணமாய்த்தான் நிகழ்கிறது மற்றும் ஒரு காரணத்தினால் நிகழ்கிறது என்பது வேறு ஒன்றும் இல்லை என்று மட்டுப்பட்ட் அறிவு சொன்னாலும், என்ன செய்து விடும் வாழ்க்கை நம்மை? என்ற கேள்வி எழுந்து அதற்கு பதிலாய்....

ஒன்றுமில்லை..ஒன்றும் செய்து விடாது என்று தோன்றுகிறது.

ஆனால் நமது தனிப்பட்ட சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நன்றென்றும் தீதென்றும் கணித்து விடுகிறோம். வளர வளர நாம் பெறும் விசயங்களை விட இழக்கும் விசயங்கள்தான் அதிகம் ஆனால் இழத்தல் என்று நாம் சொல்வது புதிதாய் வேறு ஒன்றைப் பெறுதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது அங்கே புதுமையான மனோ நிலை வந்து விடுகிறது.

மனம் என்ற வஸ்தாகத்தான் பெரும்பாலும் நாமாக இருக்கிறோம். இந்த மனதுக்கு பெரும்பாலும் புதிய விசயங்கள் கண்டு பயம்தான் ஏற்படுகிறது. அது எப்போதும் பழகிப் போன விசயங்களையே சுற்றிச் சுற்றி வர ஆசைப்படுகிறது. கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுகிறது, எதிர்காலம் பற்றிய கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டு பல்லிளிக்கிறது

புதிய விசயங்களை எதிர்கொள்ள ஒரு வலியும் அசாத்திய மனோதைரியமும், தெளிவான சிந்தனையும் தேவைப்படுகிறது. தெளிவான சிந்தனையானது மனோதைரியத்தை கொண்டு வந்து விடும் தெளிவாக சிந்திக்க அமைதியான மனது தேவைப்படுகிறது. அமைதியான மனதுக்கு நாம் மட்டும் காரணமல்ல புறச்சூழலும் காரணியாகிறது.

இங்கேதான் ஒரு சின்ன விசயம் அல்லது சவால், புறச்சூழலை நாம் தீர்மானிக்க முடியாது. அமைதியான ஒரு தியானத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ சண்டை நடக்க தியானம் தடைப்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் போது யாரோ யாரையோ சட்டையை பிடிக்க வன்மம் நமக்குள் இல்லாமலேயே வன்மம் கவனிக்கப்படுகிறது மற்றும் உட்செல்கிறது.

இங்கே கவனியுங்கள் உணர்வுகள் பெரும்பாலும் நமக்குள் உட்செலுத்தப்படுகின்றன....நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அது நிகழ்ந்து விடுகிறது. இவ்வளவும் தாண்டிதான் மன அமைதியும் சிந்தனையில் தெளிவும் நமக்குத் தேவைப்படுகிறது என்பதால் இது சாத்தியபடாமல் பெரும்பாலானவர்களுக்குப் போய் விடுகிறது.

இப்போது எல்லாம் பெரும்பாலான நேரங்களில் நான் இல்லை என்றே நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் வேண்டுமானால் நினைத்துப் பாருங்கள். அதற்காக அலுவலக நேரம் மற்றும் மனிதத்தொடர்பில் இருக்கவேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சாதகமான சூழ்நிலைகளில் நான் இல்லை என்ற ஒரு பயிற்சியை மேற்கொண்டு பாருங்கள் எப்படிப்பட்ட மனோநிலை வாய்க்கிறது என்று சொல்லுங்கள்.. ! அதாவது மென்மையாய் அமர்ந்து கொண்டு நீங்கள் இருப்பதாகவே நினையாமல் வெறுமனே உலகத்தைப் பாருங்கள்.

என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாய் நான் என்ற ஆணவம் வேரோடு சாயும்... கவனித்து சொல்லுங்கள். ஆணவம் அழிந்த பின் மாற்றம் எனபது வாழ்வின் நியதி என்ற ஒரு புரிதல் வந்து விடும்....சாதாரணமாகவே....!

சரி நான் அகம் நோக்கியே பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சம் புறத்தையும் பார்ப்போம். இரண்டையும் சமப்படுத்தி நகர்த்தி செல்ல வேண்டும். இவை இரண்டும் சேர்ந்ததுதான் முழுமை. பொருளும், பொருளற்றதும், நன்மையும் தீமையும் சேர்ந்த ஒரு பேக்கேஜ்தானே வாழ்க்கை...

இதோ பாத்தீங்களா.. மறுபடி அகம் என்னை இழுக்குது.....இருங்க வெளில வந்துடுறேன் கம்ப்ளீட்ட்டா....

கடந்த வாரத்தில் தமிழ் மண விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆன்மீகம் பகுதியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும் வாழ்வின் ஒரு நிகழ்வாகிப் போனது. அதை கடந்து போகும் போது வெறுமனே சென்றுவிட மனமும் உள்முனைப்பும் சேர்ந்தே சம்மதிக்க மறுக்கின்றது. எழுத்தினை வாசித்தவர்களுக்கும், வாக்குகள் செலுத்தி என்னை நேசித்தவர்களுக்கும், நடுவர்களாய் இருந்து உற்று நோக்கிய நண்பர்களுக்கும் எனது நமஸ்காரங்களை மனம் குவித்து தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கேயோ செல்வதற்காக எழுத தொடங்கவில்லை என்னை உற்று நோக்கவே எழுத வந்தேன். இங்கே புகழ் என்ற ஒன்று மனித மனங்களுக்கே பொதுவான ஒரு ஈர்ப்பான ஒன்று.. எப்போதும் அதை நோக்கியே மனித மனம் ஓடும். என்னைப் பொறுத்தவரை அப்படி ஓடும் நேரங்களில் மனதை நிராகரித்து விடுவேன். இப்போதெல்லாம் படைப்புகளுக்கு வரும் கருத்துக்களை பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமாக ஒரு அன்ஈசியாக இருக்கிறது.

இனி கட்டுரைகள், கதைகள், கவிதைகள் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் நண்பர்கள் மனதார வாழ்த்துங்கள் உங்கள் அன்பு எப்போதும் விலை மதிக்க முடியாதது. மேலும் அதற்காக உங்களின் நேரம் ஒதுக்கி கருத்துரை இடுவதையும் அதைக் கண்டு என் அகங்காரத்துக்கு தீனி போட்டுக் கொள்வதையும் என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை.

கருத்துரை என்ற படிமத்தை தற்காலிகமாக நீக்கிவிட்டேன். மீண்டும் எப்போதாவது இட வேண்டும் என்று தோன்றும் வரை காத்திருக்கிறேன் அதுவும் அவசியத்தின் பொருட்டுதான் இல்லையென்றால் அந்த படிமம் ஒரு வலியுறுத்தலாய் மற்றவர்களுக்கும் ஒரு கட்டாயமாய் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இனி... படைப்புகள் பற்றிய விமர்சனங்கள், கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்....இதுவும் கட்டாயம் இல்லை... !கட்டுரையில் குற்றம் இருப்பினும் இல்லை ஏதேனும் சர்ச்சைகள் இருப்பினும் தயங்காமல் தெரிவியுங்கள். வலுவான கருத்துக்களையும், ஆதங்கங்களையும் என்னுடைய கட்டுரையின் முதன்மைப் பக்கத்திலேயே பகிர்ந்துகொள்கிறேன்....!

அனைவரும் செழிப்புடன் வாழ என் பிரார்த்தனைகள்...!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா....!


தேவா. S


Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த