Skip to main content

அரிமா...!


















எமது பிடரி முடி சிலிர்த்து பறக்கிறது காற்றில்...நிதானமான எமது நடையும் பார்வையின் தீர்க்கமும் அறியப்பெறுதல் சாமானியர்களுக்கு சாத்தியமற்றது. எமது கண்களின் தீர்க்கம் பற்றிய கணிப்புகளைப் பற்றி எமக்கு இரையாகிப் போன ஜீவன்களிடம் யாரும் விசாரித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆமாம் ஒற்றை பாய்ச்சலில் குரல்வளைகளில் கடிபட்டுப் போகும் உயிர்கள் என்ன ஊர்வலங்களா நடத்தும் எமது பற்களின் கூர்மை பற்றி.....

பசிக்கும் போது மட்டுமே புசித்து பழக்கப்பட்டு இருக்கிறோம். எமது இறையையும், இரையையும் யாரும் முடிவு செய்வதில்லை எப்போதும். யாமே கூட தீர்மானிக்க முடியாத எமது தேவையை எப்போதும் எமது பசிதான் தீர்மானிக்கிறது. மெளனத்தில் கழிக்கும் காலங்களில் யாம் எம்மைச் சுற்றி ஊர்வன, பறப்பன தவழ்வன பற்றி எப்போதும் அக்கறைகள் கொள்வதில்லை.

இரைப்பயின் இருக்கம் கொடுக்கும் சுகத்தில் எம்முள் சுற்றிப்பாயும் இரத்ததின் ஓட்டம் ஒரு நதியினைப் போல சலனமின்றி பரவி எமது புத்தியை எப்போதும் குளுமைப்படுத்தியே வைத்திருக்கிறது. ஒரு மோன நிலை, ஒரு ஞான நிலையில் எம்மையே மறந்து யாம் லயித்துக் கிடக்கும் பொழுதுகளில் உலத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் ஜீவித்திருக்க கொஞ்சம் கால அவகாசம் யாம் கொடுப்பதாக வரலாற்றின் ஏடுகள் சொல்லி கொண்டே வந்திருக்கிறது காலங்கள் தோறும்....

சப்தங்கள் அடக்கி, சுற்றங்கள் சுருக்கி தனித்திருக்கும் யாம் தனித்தன்மை கொண்டவர் தாமென்று யாம் வாய் திறந்து வேறு பகிரவேண்டுமோ? சப்தமின்றி பிரபஞ்ச ஓட்டத்தில் யான் ஜனித்ததை யானே மறந்து லயித்திருக்கும் பொழுதுகளில் எமக்கு எப்போதும் உயிர் பயம் வராது இருத்தல் இந்த ஜகத்திற்கு நலம்.

ஆள் அரவங்கள் கேட்டு கூர்மையாகும் எமது காதுகள்தான் முதலில் கணிக்கும் எம்மைச் சுற்றி நடப்பது எமது எதிரியா? அல்லது தோழமையா என்று, பல நேரங்களில் தோழமையாய் எதிரிகளும், எதிரிகளாய் தோழமைகளும் எமக்கு வாய்ப்பதுண்டு. யாம் எமது உணவு, எமது வேலை என்று எல்லாமே தனியாகத்தான் வாழ காலம் பயிற்றுவித்திருக்கிறது.

யாரும் எமக்கு ஊட்டிவிடப்போவதில்லை, யாரும் எமக்கு உணவைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை. எமது உணவின் தூரம் தீர்மானிக்கப்படுவது எமது பசியின் தீரத்தால்தான். வளரும் காலங்களில் எமக்கு பாய்ச்சலே கற்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக பதுங்குதல் என்றால் என்னவென்றறியா எமது பிடரி மயிர்கள் கூறும் இலக்கு இதுதான் என்று, கூறிய கணத்தில் எமது சீற்றத்தில் பல உடல்களை யாம் கூரிக் கிழித்திருக்கிறோம். ஒற்றை பாய்ச்சலில் முதுகெலும்புகளை முறித்துப் போட்டிருக்கிறோம்.

எம் கூட்டம் வலியது, தாய்வழி சமூகத்தின் சுவடுகளை விடாமல் பின்பற்றும் எமது குலத்தில் வேட்டையாடுதல் பெரும்பாலும் பெண்டீர்தான் எமது காவல்களுக்கு மத்தியில் நடக்கும் தீர வேட்டைகளில் தீரத்தோடுதான் நிகழும் எமது உயிர்வாழும் சூட்சுமம். எப்போதும் மறைவுகளில் வாழும் வாழ்க்கை முறைகள் எமக்கு பந்தப்பட்டது இல்லை. மறைந்து வாழும் அவசியமும் தேவையும் எமக்கு எமது எதிரிகள் கொடுப்பதும் இல்லை.

மோனநிலையில் யாமிருக்கும் நேரங்கள் அதிகம். உணவு தேடலும், உண்ணலும், ஒரு தேவையின் பொருட்டு கணப்பொழுதில் முடிந்து விடும். எமது வாழ்வின் பெரும்பகுதி எம்மை மறக்கும் காமமும் எப்போதும் ஏகாந்தத்தில் லயிக்கும் உறக்கமும். தேவைகளின்றி அலைபவனை காட்டிலும் திருப்தியோடு ஓய்வெடுப்பவன் மேலானவன். எம்மை சுறுசுறுப்பில்லாதவனாய் சித்தரிக்கும் சிலருக்கு தெரியும் எமது கர்ஜனைகளின் சப்தம் ஐந்தாறு மைல்கள் கடந்தும் கேட்கும் என்று...

யாம் எழுந்து நின்றால்.....மெல்ல சிலிர்த்து எமது பிடறி மயிர் உலுக்கினால்... மெல்ல.. அடியெடுத்து அசைந்து நடந்தால்....வாய்பிளந்து கர்ஜித்தால்...

துவம்சமாகப் போவது நீயா நானா என்ற பயம் கொள்ளா ஜீவன்களும் உண்டோ...? எமது ஒட்டிய வயிறும்....ஓடும் ஓட்டமும்....பிடறி பிடித்து குரல்வளை கடிக்கும் தீரமும்....சலனமற்ற ஓய்வும்.....தீராக்காதலும் கூடி எமக்கு கொடுத்த பெயர் என்னவென்று சொல்லவும் வேண்டுமோ....?

எமது காதுகள் கூர்மையாகின்றன...சப்தங்கள் எமைச்சுற்றி நகர்கின்றன....வருவது தோழனாய் இருந்தால் எம்மை கடந்து போகும்...வாய்ப்பிருக்கிறது. எதிரியாய் இருந்தால்...அவர்களின் வாழ்க்கையை கடத்தி விட எமக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது....

பிடறிகள் சிலிர்க்க..
எமது கர்ஜனைகளின்
சப்தத்தில் அறுந்து போகும்
எமது பகைவர்களின்
உயிர் தொடர்ச்சி...!

தேவைகளே எமது எதிரிகளை சில நேரங்களில் தீர்மானித்தாலும், பல நேரங்களில் எமது எதிரிகளே எமது வீரத்தை செப்பனிட்டு கூர்மையாக்க்குகிறார்கள்...! இவ்வளவும் கூறும் நான் யாரென்றா கேட்கிறீர்கள்....

மானிடர் எமக்கு வைத்த பெயர்...சிங்கம்...!


தேவா. S



Comments

நார்நியா படம் பார்த்து தமிழ் டப்பிங் செய்து இருக்கார்
//மோனநிலையில் யாமிருக்கும் நேரங்கள் அதிகம். உணவு தேடலும், உண்ணலும், ஒரு தேவையின் பொருட்டு கணப்பொழுதில் முடித்துவிடும் எமது வாழ்வின் பெரும்பகுதி எம்மை மறக்கும் காமமும் எப்போதும் ஏகாந்தத்தில் லயிக்கும் உறக்கமும். தேவைகளின்றி அலைபவனை காட்டிலும் திருப்தியோடு ஓய்வெடுப்பவன் மேலானவன். எம்மை சுறுசுறுப்பில்லாதவனாய் சித்தரிக்கும் சிலருக்கு தெரியும் எமது கர்ஜனைகளின் சப்தம் ஐந்தாறு மைல்கள் கடந்தும் கேட்கும் என்று...//

:)
எண்ணத்தின் ஆழம்..
கழுத்தை கவ்வும் வீரம்...
எதிர்த்து நிற்கும் துணிச்சல்..

இவை அனைத்தும் எழுத்தில் கொண்டு வந்த உங்கள் தீரம்.... உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது...!!!

//யாரும் எமக்கு ஊட்டிவிடப்போவதில்லை, யாரும் எமக்கு உணவைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை.//

..........எப்படிங்க இப்படி எல்லாம் எழுதுறீங்க? எப்பவும் போல் உங்க வார்த்தை விளையாட்டை ரசிக்கிறேன்.. :)
வெகு நாட்கள் கழித்து நான் படித்த தேவாவின் பதிவு :-) மகிழ்ச்சி.. பதிவின் ஒவ்வொரு வரியும் உணர்த்தும் கருத்துக்கள் அனைத்தும் செம ;-)
Kousalya Raj said…
இது ஒரு அற்புத படைப்பு !!
இதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை...கருத்து என்று எதையாவது சொல்லி இதன் கம்பீரத்தை குறைக்க எனக்கு மனம் வரவில்லை !

மிக வியந்தேன்...சிம்மத்தின் கர்ஜனை இன்னும் என் காதுகளில்...!!
வெகுவாக் ரசித்தேன் தேவா சார்..! பொதுவா நானுங்கூட இதுபோல விலங்குகள் பேசுவதைப்போன்று எழுதுவதுண்டு அவ்வளவு சுலபமான விஷயமன்று என்று எனக்குத்தெரியும் எல்லாவிதமான நிகழ்வுகளையும் அதன் பார்வையில் எழுதுவதென்பது மிகக்கடினம்..

ரியலி நீங்களும் ஒரு எழுத்து சிங்கம்தான் சார்..!
Ungalranga said…
படித்து முடித்ததும்..லேசாய் உடல் சிலிர்த்தது..மீண்டும் அந்த சிங்கத்தின் ஓவியத்தை பார்த்துகொண்டேன்..

கம்பீரமும்.. ஆழ்ந்த அமைதியும்.. சிங்கம்... ஒரு ஞானமடைந்த மிருகம்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல