Skip to main content

வாழத்தானே வாழ்க்கை...!

















ஒவ்வொரு வார்த்தையாய் எடுத்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்! அன்பின் மிகுதிகள் எல்லாம் சொல்லில் வடிக்கப்படாதவையே என்று நாம் அறிந்துதானிருக்கிறோம், இருந்தாலும் கிளர்ந்தெழும் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்த தற்சமயம் என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்.

ஒரு வானவில்லை ஆச்சர்யமாய் பார்த்து அதில் கிறங்கிப் போய் அதிசயித்து நின்ற வினாடியில் அதன் மொத்த அழகும் என் மெளனத்துக்குள் நிரம்பி ஏக்கத்தின் சாயலில் கொடுத்த சோகங்களில் என் வெறுமை மிகுந்திருந்தது.

வானவில் அழகு...! நான் ரசித்தது உண்மை....! ஆனால் நான் யோசித்து முடித்த தருணத்தில் அங்கே அது அழிந்து போய் வெற்று வானத்தை காட்டிக் கொண்டிருந்த இயற்கையின் விதியும் உண்மை....!

வானவில் கொடுத்த ஒரு போதையில் கிறங்கிக் கிடந்த மூளையில் ஜனித்த உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாக்கி கைகளின் வழியே வழிந்தோட விட்டு ஒரு வெள்ளைப் பேப்பருக்குள் அவற்றை கொண்டு வந்த பின்.....என் உணர்வு முழுமைப் பட்டுப் போனது.

வானம் வரைந்து போட்ட
ஓவியத்தின் அழகில்
நான் ஒரு தூரிகையாய்
கிறங்கிக் கிடக்கையில்
அதை அழித்துப் போட்டது
யார்..?

***

அவ்வப்போது
வானவில்லை உடுத்தி
ஆச்சர்யப்படுத்தும் வானம்
எப்போதும் நிர்வாணமாய்த்தான்
இருக்கிறதா...???!!!!!

***

இனி ஒரு கணம்
எனக்கு எப்போது கிட்டும்
முழுதாய் வானவில்லை
கண்களால் சுகித்து
கவிதைகளை பிரசவிக்க!

***

அழகுகள் எப்போதும்
நிரந்தரப்பட்டு நிற்பதில்லை
கரைந்து போன
அந்த வானவில்லைப் போல!

***

போதையூற்றும் இயற்கையின் அன்றாட நிகழ்வுகளில் இப்படி நான் சொக்கிப் போய் நிற்கும் பல இடங்கள் உண்டு. அங்கே எந்த மானுடத் தேவைகளுமின்றி சூழலுக்குள் என்னைத் தொலைத்த தருணமெல்லாம் எப்படி காட்சிப் படுத்த அல்லது எப்படி உங்களுக்கு விவரிக்க என்ற பேரவல் எழுவதும் பின் அது இயலாமல் ஏதோ ஒன்றை கிறுக்கி வைப்பதும் வழமையான ஒன்றுதான்.

ஒரு நல்ல இசை, ஓவியம், மழை, இரவுகளில் நிலவை மறைத்து மறைத்து சிரிக்கும் தென்னங்கீற்று, பிணமெரியும் சுடுகாட்டில் தூரத்தில் கேட்கும் ஒரு குழந்தைக்கான தாலாட்டு, தனியே சைக்கிளில் செல்லும் போது எதிர்ப்படும் எதிர் காற்று என்று அவ்வப்போது பீறீட்டு எழும் உணர்வுகளை, ஏன் பகிரவேண்டும் என்று தோன்றுகிறது....என்று ஒரு அதிகாலைச் சூரியனோடு நான் காதல் செய்து கொண்டிருந்த வேளையிலே யோசித்தேன்.

கர்வம் கொண்டு எனக்கு மட்டுமே தெரியுமென்ற வகையா இது....? என்று யோசித்த போது, உணர்வுகளை பகிர்தலில் எப்போதும் மமதைகள் இருப்பதில்லை, அது...ஒரு தோழனின் தோள் சாய்ந்து இளைப்பாறும் நிகழ்வை ஒத்தது என்றெண்ணிய மறு நிமிடம் என் கைகள் மீண்டும் பரபரத்தன...

காகிதத்தோடு
கூட காத்திருந்த
என் பேனாவின்
நுனியின் பாய்ந்தே விடவா?
என்று என்னை பரிகசித்து
பார்த்துக் கொண்டிருந்த
என் பிள்ளைகளைத்தான்
நான் கவிதை என்கிறேன்...!

எழுத்து ஒரு வரப்பிரசாதம். அது வாசிப்பவனை எவ்வளவு தூரம் சீராக்குகிறதோ அதை விட பல மடங்கு எழுதுபவனை சமப்படுத்துகிறது. பகிர வேண்டுமென்ற ஆசையில் கிறுக்கி வைக்கும் எல்லாமே எல்லோரையும் சுவாரஸ்யப்படுத்தி விடாது. பலருக்கு அது வேறு பதில்களைக் கூட பகிர்ந்து விடலாம்.

கொஞ்சமாய் தரையில் சிந்திக் கிடந்த நீரை கைகளால் அங்கும் இங்கும் அலை பாய வைத்து ஒரு ஓவியம் வரைய நான் முயன்று கொண்டிருந்த ஒரு உச்சி வெயில் நேரத்தில் வெளியிலிருந்து என்னைக் காண வந்த நண்பனொருவன் சொன்னான் எனக்கு பைத்தியமென்று....!

நான் பைத்தியாகாரனாயிருந்ததால் அன்று பெரு மகிழ்ச்சி அடைந்தேன்...! நண்பனோடு கை குலுக்கி சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னை அவன் புரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் என் எதிர்பார்ப்பில் நியாயம் கொஞ்சம் கூட இருக்காது என்று எனக்கும் தெரியும்.

அது என்னுடைய அப்போதைய மகிழ்ச்சி. நீரினை அங்கும் இங்கும் இழுத்து அது ஒரு குழந்தையாய் தவழ்ந்து வரும் போது கைகொட்டி ஒரு சிறுவனாய் மனம் குதித்த என் சந்தோசத்திற்கு என்ன விலை கொடுக்க முடியும்..? ஆனால்..என்னை போன்ற யாராவது வேறு ஒரு பைத்தியம் தானும் கொஞ்சம் தண்ணீரை கீழே சிந்தி என்னைப் போலவே பைத்தியமாக முயற்சி கூட செய்யலாம்....

அப்போது எங்களுக்குள் பகிரப்படாத ஒரு உள்ளார்ந்த உணர்வுப் பரிமாற்றம் நிகழுமே.....அந்த நிகழ்வினை, அந்த உணர்வினை நான் பகிர்தல் என்கிறேன்.

இருக்கும் வரை மனிதத் தொடர்புகளை விஸ்தாரித்து சந்தோசங்களை பேச்சாகவும், எழுத்தாகவும், இசையாகவும், மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டும். முற்றுப் பெறப் போகும் இந்த வாழ்வில் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்று யாரேனும் சொன்னால்..சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுங்கள்....

ஆமாம்...என்னைச் சுற்றி இவ்வளவு உறவுகள் இருந்தன, மேலும் அவர்களால் நான் இப்படி எல்லாம் சந்தோசமாயிருந்தேன், நான் இவ்வளவு சந்தோசப்படுத்தினேன் என்ற நிறைவை நாம் கொண்டு போவோம் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.

நமது குட்டி, குட்டி சந்தோசங்கள் எல்லாம் நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஒரு வேர் பிடித்த மரம், தழைத்து, வளர்ந்து, விதை கொடுத்து, கனி கொடுத்து, பழம் கொடுத்து, நிழல் கொடுத்து, இளைப்பாற நிழல் கொடுத்து பின் வேறோடு ஒரு நாள் மறைந்து போவதில் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லை, சிக்கலும் இல்லை, வாய்ப்பாடுகள் இல்லை....எந்த முரணும் இல்லை.

ஆனால்...

காலமெல்லாம் பயனீட்டாளர்கள்...எனக்கு இந்த மரம் நிழல் கொடுத்தது, எனக்கு இந்த மரம் பழம் கொடுத்தது, விதை கொடுத்தது என்று நினைவில் கொள்ளத்தான் செய்வார்கள். இப்படி நினைவு கூறுவதால் என்ன பெருமை வந்து விடப் போகிறது மரத்துக்கு....?

ஒரு மரம் உயிர்த்தது; வெயிலிலும் மழையிலும் நிலைத்தது; காய்த்தது, பழுத்தது; மறைந்தது. வாழ்ந்த காலம் வரைஅந்த மரம் பெற்ற அனுபவம்தான் அதன் வாழ்க்கை... அவ்வளவே...!

இங்கே பிரித்தெடுத்துப் பார்க்கவும் ஆரயவும் ஏதுமற்று அது பகிர்ந்தது மட்டுமே மிச்சமிருக்கும். காலங்கள் ஏதேதோ கதைகள் சொல்லி ஓராயிரம் சூழல்களை கொடுத்து நம்மை ஓடச் செய்து விடுகிறது. இந்த ஓட்டத்திலேயே வாழ்வின் அழகுகளை, இயல்பான சந்தோசங்களை கவனித்தும் கவனிக்காமலும் வாழ்ந்து விரக்திகளை மட்டும் தேக்கிக் கொண்டு வெறுப்பில் மரணித்துப் போகிறோம்.

எப்போதும் வானம் ஓவியங்களை தீட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கிறது......! பட்சிகளின் ஓசைகளை எல்லாம் கேட்டும் கேட்காமல் ஏதோ ஒர் அலைவரிசையில் வானொலிக்கு காது கொடுத்து விட்டு அவற்றை ஏமாற்றி விடுகிறோம், ரசித்து சமைக்கும் அம்மாவிற்கும், மனைவிக்கும் ஆழமாய் ஒரு புன்னகையைக் கூட பரிசளிக்காமல் தொலைக்காட்சி விளம்பரத்தில் லயித்து விடுகிறோம்,

புத்தகங்களை பிரித்து வாசிக்க நேரமில்லாமல் முரண்களுக்குள் சிக்கி மன உளைச்சலுக்குள் போய் விடுகிறோம். தெருவோரம் நிற்கும் சுண்டல் விற்பவரிடம் அன்பாய்ப் பேசி சிரித்து அவர் குடும்பம் நலமாயிருக்கிறதா என்று விசாரிக்காமல் ஓராயிரம் முறை அவரைக் கடந்து செல்கிறோம், எப்போதும் பணம் தேடித்தானே ஓடுகிறோம் எப்போதாவது வாழ்க்கையை நாம் வாழ்ந்திருக்கிறோமா? சொல்லுங்கள்...

சரி கட்டுரைக்குள்ளே வந்து வெகு நேரம் ஆகி விட்டதல்லவா....? இந்த கேள்வியை மீண்டும் ஒரு முறை உங்களின் சிந்தனைக்கு விட்டு விட்டு....செல்கிறேன்...!

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாமெப்போதாவது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோமா?


தேவா. S


Comments

Kousalya Raj said…
வாழ்க்கை வாழத்தானே என்பதை மறந்துவிட்டு எதன் பின்னோ அல்லது எதை நோக்கியோ ஓடிகொண்டிருக்கிறோம்...

நம்மை சுற்றி இருக்கும் அற்புதங்களை ரசிக்க தவறிவிடுகிறோம்...!

எப்போதும் பரபரப்பான இயந்திர வாழ்க்கை இன்று...நின்று நிதானித்து கொஞ்சம் வாழ்ந்து தான் பாருங்களேன் என்று இதமாக சொல்கிறது இந்த படைப்பு...

உங்களுக்கு என் நன்றிகள், பாராட்டுகள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல