எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே...
கால்கள் கொண்டு திக்குகளெட்டும்
நடந்து காட்டினோம்...!
பேச்சற இரு என்று எம் நாவினை
நீ வெட்டி போட்டாய் காலமே...
எம் மெளனத்தால் அன்பென்னும்
பூக்களை எம்மைச் சுற்றி
கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...!
எம் விழிகளை குருடாக்கினாய் காலமே...
இருளென்னும் கருமையில்
கலங்காது நின்று வர்ணங்களை
எம் புத்தியில் தேக்கி வைத்து
எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்!
சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில்
மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்;
பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்;
சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட
ஓடும் கால்களுக்கு எல்லாம்
எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....!
என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ?
காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும்
முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன்
என்ற சத்தியம் உணர்..!
பொய்களின் நகர்வுகளில்
எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள்
எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும்
என்ற நிதர்சனம் அறி!
கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!
எம்முள் படிந்து கிடப்பது
பரந்து கிடக்கும் சத்தியத்தின்
சப்தமிலா அணுத்துகள்கள் என்னும்
மூலம் உணர்; உணரலை அதிர்வுகளாக்கு;
அதிர்வுகளை எம்மைச் சூழ்ந்த
மானுட புத்திகளில் உணர்வுகளாக்கு...
நினைவு பக்கங்களை எல்லாம் திருத்தி எழுது;
சுவாசங்களாய் ஊடுருவி
எம்மின் செழுமையை மானுட
நாடிகளுக்கு நளினமாய் எடுத்துச் சொல்;
ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகளாய் போ
நிதர்சனத்தின் வடிவங்களை
செவுட்டில் அறைந்து பாடமாய்ச் சொல்!
ஐம்புலன் கொண்டு அகந்தை தேக்கி
வாழும் சக மானுடனல்ல...
நான் என்ற உண்மையை உரை;
பொருட்களின் கூட்டும், கூட்டுப் பொருட்களும்
ஜனித்ததின் மூலத்தை உணர்ந்தவெனென்று
மென்மையாய்ச் சொல்...!
மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?
வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....
இனி....
என் மெளனத்தை என்னதான் செய்கிறார்கள்
என்று நானும் பார்க்கிறேன்...,
நீயும் பார் காலமே...பார்!
தேவா. S
Comments
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!
வாழ்த்துக்கள்
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?
வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....
//
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.