Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு 4 !



அயற்சியான நாட்கள், அழுத்தம் கொடுக்கும் நினைவுகள், புத்தியைப் பிழியும் சூழல்கள், மனிதர்களோடான சந்தோசங்கள், கோபங்கள், துக்கங்கள், சிரிப்புகள், அழுகைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகள், அலைக்கழிப்புகள், ஆர்வங்கள், பரபரப்புகள், குற்ற உணர்ச்சிகள், தற்பெருமைகள், தாழ்வு மனப்பான்மைகள், சாந்தங்கள், அமைதிகள், கனத்த மனோநிலைகள், ப்ரியங்கள், நட்புகள், காதல்கள்....

விரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் உப்பு மூட்டை சுமப்பது போல சுமந்து செல்கிறது. சுமையாய் நம்மைத் தூக்கிச் செல்கிறதே இந்த வாழ்க்கை என்று கருணை பொங்கும் போதே... நடு முதுகெலும்பு முறியும் படி படாரென்று கீழே " பொத் " என்று சுடும் வெயிலில் போட்டு விட்டு கை கொட்டி அதுவே சிரிக்கவும் செய்கிறது.

வெறும் காலோடு சூட்டில் ஓடி வருபவனை ஒற்றை மரத்தின் நிழல் எப்படி வாரியணைத்து நிழலுக்குள் தஞ்சம் கொடுத்து குளுமையான காற்றைக் கொடுக்கிறதோ அப்படியான அதிர்வுகள் மிகுந்த சில மணி நேரங்களை விரித்துப் போடும் இந்த இரவை எப்படிக் காதலிப்பது என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைளைத் தட்டச்சு செய்து நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை அழகானது. சிலருக்கு அதிசயமானது, சிலருக்கு மிகக் கொடுமையானது, இன்னும் பலருக்கோ பிடிபடாதது என்று விவரித்துக் கொண்டே வார்த்தைகளினூடே நான் வழுக்கிக் கொண்டு செல்ல முடியும்...ஆனால் என்னைப் பொறுத்தவரை ரொம்பவே சவாலானது. "ப்ப்ப்ளார்" என்று முதுகில் அறைந்து விட்டு ஓடி விடுகிறது, துரத்திப் பிடித்து நான் தோற்பேன் என்னும் இடத்தில் ஜெயித்து மறுபடி....வாழ்க்கைக்கு " ப்ப்ப்ப்ளார் " என்று ஒன்று கொடுத்து விட்டு நகர்கையில்...

கண நேரத்தில் கண் இமைக்கும் முன்பு கழுத்திற்கு ஒரு மயிர் இடைவெளியில் பளீச் என்று ஒரு வாள் வீசிப் பார்க்கிறது.... சரலேன்று விலகி வாள் வீசிய வாழ்க்கையின் பிடறி பிடித்து உலுக்கி முதுகில் குத்தி விரட்ட வேண்டியதாகிறது. இப்படியான சவால்களை கடந்து கடந்து களைப்பாறும் நேரங்களின் அழகும் நேர்த்தியும், ஓய்வும் இன்னும் வலுவாக ஓடச் சொல்லி வற்புறுத்திகிறது.

எல்லா இடர்பாடுகளையும் இரசித்து, இரசித்து, முன்னேறி, முன்னேறி இந்த விளையாட்டு கொடுக்கும் சுகம் அலாதியானது மட்டுமல்ல அசதியானதும் கூட.

 அசதிக்கும், மூளைச்சூட்டிற்கும் பிறகு, மெல்ல நிதானப்படுத்திக் கொண்டு ஒரு கட்டுரையிலோ, கவிதையிலோ, கதையிலோ மூழ்கும் நிமிடங்கள், அல்லது ஏதேனும் ஒரு பாடலை காதுகளால் சுகித்து சுகித்து அந்த இசை என்னும் போதையில் ஊறித் திளைத்து களைப்பினை எல்லாம் நீக்கி உற்சாகத்தில் ஒரு மாதிரியான தொய்வான நிலையில் நிறைய சக்திகளை பெற்றுக் கொண்டிருக்கையில் அது அடுத்த நாளை எதிர்கொள்ள எடுத்துக் கொள்ளும் பயிற்சி அல்லது உடலுக்குள் சக்தி நிறைத்தல் என்று எண்ணும் போது....சந்தோசம் இன்னும் இருமடங்காகிறது.

இப்படித்தான், ஏதேதோ பாடல்களை கண்களால் அளந்து கொண்டு நகர்ந்த பொழுது இந்த பாடலுக்குள் உள் நுழைந்து மயக்கும் குரல் மெல்ல என் செவிகளை வருடிக் கொடுத்து, புத்திக்குள் ராஜா சாரின் இசையை வழியவிட்டு, பாடல் முடிய, முடிய மீண்டும் மீண்டும் கேட்டு, கேட்டு உடல் முழுதும் இசை போதை பரவ...பாடலை விட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்....

ஒரு காதல் அதை கடந்து விசுவரூபமெடுத்து நிற்கும் காமம், வேகம், மோகம், என்று எல்லாம் கலந்த ஒரு முரட்டு உணர்வை இசைக்குள் கொண்டு வரவேண்டும். காதலை சரியாய் வெளிப்படுத்த வார்த்தைகளின் அர்த்தங்களைக் கடந்த மிருதுவான குரலும், காமத்தை பிரமாண்டப்படுத்திக் காட்ட இசை அரசனின் இசைக்கச்சேரியும் என்று......

இந்தப் பாடல் முழுதும் மதமதப்பாய் காமமும், மலர்ச்சியாய் காதலும், ஒன்று கூடி, நம்மை இழுத்துச் செல்லும் தூரங்கள் வார்த்தைகளுக்குள் கண்டிப்பாய் கொண்டு வரமுடியாதவை.

இப்படி எல்லாம் உணர்வுகளை இசைவாத்தியங்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியுமா....? என்று ஆச்சரியமாய் கேட்டும் மனதை மண்டியிடத்தான் செய்துவிடுகிறது இசைச்சக்கரவர்த்தியின் இந்தக் இசைக்காவியம்....

அடா....அடா.....அடா....இவ்வளவு தூரம் வந்துட்டு அப்புறம் என்னங்க.......பாட்டுக்குள்ள வாங்க....! 



தேவா. சு


Comments

ஹேமா said…
வாழ்வோடு இளைகிறது இசை.நீங்கள் வாழ்கைக்கு ப்ளார்ன்னு அறையிறமாதிரி இங்கயும் அடிக்கடி நடக்கும்.என்னை அமைதிப்படுத்துறதே இப்படியான இசைதான்.ரசனையான பாடல் !
இசையில் மன உணர்வுகள்.அமைதிகானும் எனக்கும் இசைதான் .பிடிக்கும்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த