இந்தக் கணம் எழுதிச் செல்லும்
சுவாரஸ்யமான நினைவுகளின்
எல்லா பக்கங்களிலும்
உன் பெயரே எழுதப்பட்டிருக்கிறது...!
விடிவதற்கு முன்பாகவே
எழுந்து விடும் உன் நினைவுகளை
ஒரு குழந்தையாய் என் நெஞ்சில்
சுமந்து கொண்டுதான்
என் தினசரிகளைக் கடக்கிறேன்...!
யாரோடும் பேசப் பிடிக்கமால்
மீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு
நான் பேசிப் பேசியே
கழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள்
உன்னால்தான் நிரம்பி வழிகின்றன...!
கைகோர்த்து நடக்கும் காதலர்களின்
கைவிரல்களாய் நானும் நீயுமே
இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்...
யாரோ யாருக்கோ தலை கோத....
கோதும் தலை எனதாகவும்
விரல்கள் உனதாகவுமே
கற்பிதங்கள் கொள்கிறேன்..!
தாயின் முந்தானை பிடித்து...
அலையும் குழந்தையாய்...
உன் நினைவுகளை பற்றிக் கொண்டு
திரியும் என் காதலின் மொழியற்ற ...
தேம்பல்களை நான் கவிதைகளென்று
சொல்வதும் உன்னால்தானே...?!
எப்போதும் சுவாசிப்பது போல
உன்னை நேசிக்கும் ஒருவனிடம்
என் மீதான உன் காதல் எப்படியானது
என்ற உன் கேள்விகான பதிலை
எழுதத் தெரியாமல்....
இதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
எப்படி முடிப்பது என்று தெரியாமல்...
தேவா. S
Comments
நினைவுகளில் மட்டுமல்ல, பொழுதுகளிலும் நீ என்று பேசாமல் இருப்பதற்கு காரணம் சொன்னது அழகு! பார்க்கும் இடங்களிலெல்லாம் நபாரதியை நினைவூட்டுவதை என்னென்பேன்...கவிதையின் காரணியை கோடிட்டு காட்டிய வரிகள் அற்புதம்! கிறுக்கலில் பதில் சொல்லிவிட்டாய்... உன் மீதான என் காதல் முடிவற்றது என்பதை 'எப்படி முடிப்பது என்று தெரியவில்லை' என்று கூறிய விதம் வெறும் கூற்றாய் படவில்லை.. தொடரட்டும் சுவாசம்!!
கைவிரல்களாய் நானும் நீயுமே
இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்/
வித்தியாசமான சிந்தனை. அழகான கவிதை..
அருமையான வரிகள்