வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் நிறைந்து கிடக்கும் உணர்வொன்றை மொத்தமாய் என்னுள் திணித்துப் போட்டிருக்க்கும் உனது பேரன்பினை விவரிக்க இயலாமல் ஒரு குருடனாய் தட்டுத் தடுமாறி உனக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை இயம்பினாலும் தீராத காதலொன்றை என் வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் பிராயத்தனத்தை நான் வலி என்பதா சுகம் என்பதா இல்லை இரண்டும் பிசைந்தெடுத்த கலவை என்பதா?
அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....ஆழமான பேரமைதியை உள்வாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு மரக்கிளையில் அதன் துணை காத்துக் கொண்டுமிருக்கலாம்..
இறக்க முடியாத சிலுவையினை சுமக்கும் தேவனாய் உன்னை மறக்க முடியாமால் நகரும் என் பொழுதுகளை எல்லாம் நீயே விடியவைக்கிறாய்...நீயே அணைத்தும் வைக்கிறாய். எடுத்தியம்ப இயலாத உணர்வுகளைத்தான் எப்போதும் போல இப்போதும் எழுதி வைக்கிறேன்....!
ப்ரியங்கள் எப்போதும் சொல்லிக் கொள்வதில் முடிந்து விடுவதில்லை. நேசங்கள் ஒரு போதும் மேடையேறி தன்னை கோடி பேருக்கு அது அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் பகிரவேண்டிய அவசியமற்று மெளனமாய் சுற்றும் இந்த பூமியையும், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனையும் இருக்கிற்தென்று சொல்லி நியாயங்கள் பேச வேண்டியதும் இல்லை.
காதலென்ற ஒற்றை சொல்லுக்குள்
அடைபட முடியாமல் துடிக்கும்
என் உணர்வுகளை பிரம்மாண்டமாய்
விரித்துப் போட்டிருக்கிறேன்
இந்த பிரபஞ்சப் பெருவெளியெங்கும்
திறந்து கிடக்கும் வானத்தின்
நட்சத்திரங்களாய் கண்சிமிட்டும்
உன் மீதான என் காதலுக்கு
மறுமொழி பகிராவிடினும்
இமைகள் சிமிட்டி விழிகளாலாவது
நீ சிரித்து விட்டுப் போ....!!
இப்படியாய் கிறுக்கிக் கொண்டே பின்னணியில் இசைத்துக் கொண்டிருக்கும் இளையரஜாவின் இசைக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த பாடலுக்காக நான் ஏதோ எழுதினேன் என்று சொல்ல முடியாது ஆனால் பாடல் கொடுத்த உணர்வுகள் எங்கோ இழுத்துச் சென்று என்னை நிறுத்தியதால் எழுதினேன் என்பது உண்மை. அட்டகாசமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் இது போன்ற பாடலின் சூழல்கள் எல்லாம் கவிதைத்தனமானது. தன்னுடைய துணையை நினைத்து படத்தின் ஹீரோ பாக்கியராஜ் சோகமாய் பாடிக் கொண்டிருக்கையில் நம்பியார் அப்படியே ப்ளாஸ் பேக்கில் தன்னுடைய காதலியோடு டூயட் பாடுவார். ஒரே பாடலை சோகமாகவும் டூயட்டாகவும் உணர வைக்கும் வித்தையை செய்திருப்பார் ராஜா சார்.
முழுக்க முழுக்க ஏக்கத்தையும் காதலையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடலை சிதம்பரநாதன் என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.
" ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு "
வலியை ஏந்தி வரும் பாடலோடு கரைந்து போக வாழ்த்துகள்...!
தேவா சுப்பையா...
Photo Courtesy: யோ
Comments
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
யே யப்பா ... முழுசா நிமிஷம் ஆகிடுச்சு ஏக தம்முள புரிஞ்சு படிக்க ...! எவ்ளோ நீளமான வரிகள் ...! சாவடிக்குறீங்கண்ணா ..கிளாசிக் ...!