இறக்கி வைக்க முடியாத சுகங்களை எல்லாம் சுமந்து செல்லும் வழிப்போக்கனாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என் நினைவுகள். காவியங்கள் என்று தம்மை இயம்பிக் கொள்பவைகள் எல்லாம் அழுத்தமான வலிகளையே காலங்களாய் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. வலிகளோடு கூடிய தனிமையின் சுகம்தான் ஆதி பிரபஞ்சமாய் இருந்திருக்குமோ..? உறக்கத்தின் போது காணும் கனவுகள் எப்போதுமே நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. உணர்வோடு காணும் கனவுகள் எப்போதுமே அலாதியானவை...அவற்றுக்கு யாதொரு கட்டுப்பாடுகளும் கிடையாது.
ஒரு அழகிய பாடலை கேட்டு ரசிக்கையில் சப்தத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்வது போல, ஒரு விருப்ப ஓவியத்தை வரையும் போது நமது இஷ்டப்படி கோடுகளை நீட்டி மடக்கி நகர்வது போல, யாருமற்ற சாலையில் அதிகாலையில் வாகனத்தில் ராஜாசாரின் துணையோடு புரண்டு படுத்து எழும் அதிகாலையை எதிர் கொள்வது போல, உணர்வோடு கால் உதைத்து எழும் நினைவுகளின் முதுகு தட்டி ஒரு புரவியில் பயணிக்கும் சுகத்தோடு கனவுகளை நாம் முடுக்கி விட்டுக் கொள்ள முடியும்.
எப்போதும் நிஜம் கொடுமையானது. அது பல கோரங்களை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியே அஷ்ட கோணலாய் நடித்துக் கொண்டிருப்பது. சரிகளுக்குள் தவறுகளும், தவறுகளுக்குள் சரிகளும் என்று எப்போதும் ஒரு புதிர் விளையாட்டைப் போல நிஜம் நம்மை ஏற்றி, இறக்கி நகர்கிறது ஆனால் கனவுகள் எப்போதுமே வரையறை செய்யப்படாத, யாரென்றே அறிந்திராத ஒரு கற்பனைக் காதலியை ஒத்த சுகத்தைக் கொடுக்கக் கூடியது. அது என்ன வரையறுக்கப் படாத காதலி என்று கேட்கிறீர்களா? காதல் என்பது கட்டுகளற்றது என்று உணர்ந்த பின்பு காதலியை மட்டும் ஏதோ ஒரு உடலுக்குள் சூழலுக்குள் அகப்பட்ட ஒரு பெண்ணாய் தேடிக்கொள்வது அபத்தம்தானே..? காதல் புலனறிவுக்கு அப்பாற்பட்டது.....அது எல்லைகளற்ற பெருவெளி.
வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் ஒப்பற்ற கவிதைகளை எழுதியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காதலியை தன் முன் வைத்துக் கொண்டு எழுதி இருந்திருக்க மாட்டார்கள். நித்ய கன்னியாய் கண்ணம்மாவை எங்கேனும் கண்டேன் என்று ஒருபொழுதும் பாரதி நம்மிடம் பகிர்ந்திருக்க மாட்டான். கண்ணம்மா அவனின் கனவுக் காதலி. அவள் பாரதியின் ஏகாந்தக் கனவுகளுக்கு எப்போதும் துணையாயிருக்கும் லெளகீக கட்டுக்கள் அற்ற ஒரு முழுமை. பாரதி இமை மூடினால் கண்ணம்மா அவனுள் உதயமாவாள். அவனின் எல்லா செயல்களுக்கும் அவனுக்கு துணை இருந்தது ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல...
அவன் கற்பனைக் கடவுள் அவனுக்குப் படைத்தளித்துக் கொடுத்த கண்ணம்மாதான் பாரதியோடு எப்போதும் இருந்தாள். பாரதி சோகமாய் இருந்த போதெல்லாம் அவன் தலை தடவி அவள்தான் ஆறுதல் சொல்வாள். அவன் எழுதிய எல்லா கவிதை வரிகளையும் முதலில் வாசித்து பாரதிக்கு சொல்வதும் அவள்தான்.... உலகமே நிராகரித்தாலும் கண்ணம்மா பாரதியின் கை பிடித்து கொண்டு கம்பீரமாகச் சுற்றித் திரிவாள். அவன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எழுதினாலும் சரி, மானங்கெட்ட மாயையே நீ மாயாயோ..? என்று மாயையைப் பழித்தாலும் சரி..., அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமுழக்கமிட்டாலும் சரி...
கடைசியில் இதுவன்றோ தலைமை இன்பம் ஆதலால் காதல் செய்வீர் என்று அவனை அறைகூவல் விடுக்க அவள்தான் காரணமாவாள்.
காதலிகளை பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களின் கற்பனையில் இருந்து ஜனிப்பித்துக் கொண்டார்கள். எதார்த்தத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் விரும்பும் ஒரு ஆணிடம் இருந்தோ, பெண்ணிடம் இருந்தோ அவர்களால் பெற முடிவதில்லை. மனித மனங்கள் மிகவும் குழப்பமனாது அது எப்போதுமே சிக்கலை கருத்தரித்துக் கொண்டு அமைதியை பிரசவிக்க போராடிக் கொண்டிருக்கும். ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ நிஜத்தில் காதலிக்கத் தொடங்கும் போதே அங்கே பல்வேறுபபட்ட சூழல்களுக்கு ஒரு படைப்பாளி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. விரும்பினால் பொறியைத் தட்டி மின்விசிறியை ஓடவிடவும் வேண்டாமென்றால் அதை நிறுத்திக் கொள்ளவும் ஒரு படைப்பாளி விரும்புவதே இல்லை...
அவன் தோட்டத்தில் எப்போதுமே பூக்கள் பூத்துக் குலுங்கும், நின்று விடாத தென்றல் காற்று பட்டு தலையாட்டிக் கொண்டிருக்கும் மரங்களில் பட்சிகளின் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும்....நட்சத்திரங்கள் நிரம்பிக் கிடக்கும் வசீகர இரவுகளின் பேரமைதியில் அவனுக்கான தாலாட்டை எப்போதும் இந்த பிரபஞ்சம் இசைத்துக் கொண்டிருக்க...அவன் விரும்பிய ஓவியங்களை எல்லாம் இயற்கை பகல் முழுதும் அவனுக்கு காட்சிகளாக்கி வைத்திருக்கும்.
நிஜம் கட்டுப்பாடுகள் கொண்டது. கற்பனைகள்...எல்லைகளற்றது.
நிஜத்தில் வாழ்ந்து கொண்டே கற்பனைகளில் சிறகடிக்கும் மனோநிலை கொண்டவனுக்கு எதற்கு புறத்தில் ஒரு காதலி? ஏதோ ஒரு நல்ல புத்தகம், திரைப்படம், சூழல் அல்லது நல்ல ஒரு இசை என்று சுற்றிச் சுற்றி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஓராயிரம் விசயங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் தன் கற்பனைக் காதலியோடு கை கோர்த்தபடியே அவனால் லயித்து விட முடியாதா என்ன....?
ஒரு பெருமழைக்குப் பின்னான
நனைந்து கிடக்கும் நிலமாயிருக்கும்
என் கற்பனைகளில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி
என் வார்த்தைகளைக் கொண்டு
எப்போதும் எழுதிக் கொள்கிறாள்
அவளுக்கான கவிதை வரிகளை...
பாரதிக்குள் விழுந்து கண்ணம்மாவிடம் சரணடைந்து மீளமுடியாமல் போனதற்கு பரிகாரமாய் இந்த கட்டுரையை எனக்குள் இருக்கும் கண்ணம்மாவிற்கு சமர்ப்பித்துதான் ஆகவேண்டும். நீங்களும் பாரதியைக் கேட்டு மீள முடியாமல் போகக் கடவீர்களாக;
தேவா சுப்பையா...
Comments