Skip to main content

சத்குரு...!


பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய் ஜனித்து தனித் தனி உடம்புக்குள் வியாபித்து நின்று கொண்டு உலகத்தின் மையமாய் தன்னைக் கருதி நகரும் இவ்வாழ்க்கையின் மையம் என்று ஒன்றும் கிடையாது....

என்றாலும்....

குருநிலை என்பது ஒரு கற்பனை மையம். எதுவமற்ற தன்மைக்கு, அடையாளம் இல்லாத ஒன்றுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு நகரும் சுவாரஸ்யம். இல்லை என்பதை சொல்லும் ஒரு விசயத்தை, இல்லாமலேயே போவோம் என்ற உண்மையோடு வாழும் சத்தியத்தைப் பற்றிக் கொள்ளுமொரு தந்திரம். மனிதர்களாய் இருக்கும் போது இன்னொரு மனிதனே இந்த தந்திர உபாயத்தை சரியாகச்  செய்ய உதவ முடியும். குருநிலை என்பது இன்னொரு மனிதராய்த்தான் இருக்க வேண்டும் என்று யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு மலையாய் இருக்கலாம். நெருப்பாய் இருக்கலாம். சிலையாய் இருக்கலாம். பரந்து விரிந்த வான் வெளியாய் இருக்கலாம்... ஏன் இன்னும் சொல்லப் போனால் ஒன்றுமில்லாத அந்த பேருண்மைக்குள் கூட்டிச் செல்லும் வேறு எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்....

அது பின்பற்ற விரும்பும் மனிதரின் பக்குவத்தை பொறுத்த விசயம் என்றாலும் இன்னொரு மனிதர் நமக்கு குருவாய் அமைவது சுகம். புலன்களால் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதர் சத்தியத்தை, சாந்தத்தை, பேரமையில் லயித்துக் கிடந்து அந்த உண்மைக்குள் நாம் எப்படி வரவேண்டும் என்று தன் வார்த்தைகளாலும் செய்கையாலும், ஆட்டத்தாலும், பாட்டத்தாலும் கொண்டாட்டத்தாலும் விவரித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பேராசிரியர் போல வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் விவரித்துக் கொண்டே செல்லும் அந்த மனிதர் எந்த வகையிலும் தன்னை சக மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவதே இல்லை. சுற்றி இருக்கும் மனிதர்களின் போற்றலும் தூற்றலும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் போதனை செய்ய விரும்புவது என்று ஒன்றுமே இல்லை. கேள்விகள் இல்லாத இடத்திற்கு அவர் நம்மை தள்ளி விடவே எப்போதும் முயல்கிறார்.

ஆன்மீக தத்துவங்களை இங்கும் அங்கும் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த என் பெரும் தேடலில் குரு என்று யாரையும் மனதால் வரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் ஒவ்வொரு திறப்புக்களை எனக்கு கொடுத்தார்கள். பல நேரங்களில் சூழல் எனக்கு குருவாயிருந்தது. சூழல்களையும், அனுபவத்தையும் குருவாய் மையப்படுத்திக் கொண்டுதான் பெரும்பாலும் நான் நகர்ந்திருக்கிறேன். இது எனக்குள் நானே மூழ்கி மூழ்கி, ஒவ்வொரு சுவராய் போய் மோதி அடிபட்டு பின் இது வழியல்ல என்று வேறு வழி நோக்கி நகர்வதைப் போன்றது. இந்தப் பயணம் சுவாரஸ்யமானது என்றாலும் இது முழுக்க முழுக்க நம் சூழலை மையப்படுத்தியே நகரவேண்டிய நிர்ப்பந்தத்தை எனக்கு கொடுத்தது. சூழல் என்பது ஒரே எண்ண ஓட்டத்தோடு எப்போதும் இருப்பது கிடையாது ஆதலால்....புறச் சூழலுக்கு ஏற்றார் போல தாளம் எனக்குள் தப்பிப் போனதும் உண்டு.

என்ன இருக்கிறது இங்கே? இறப்பதற்கு முதல் நிமிடம் வரை பொருள் தேடி ஓடும் மிருக வாழ்க்கை வாழ எனக்கு எதற்கு மனித தேகம்? சத்தியம் எதுவென்று சுட்டிக்காட்டுமொரு ஆன்மாவைக் கொண்டவன் நான் தவறு என்று தெரிந்தும் எப்படி லெளகீக ஆதாயத்துக்காக ஒரு மனிதரை நான் ஆதரிக்க முடியும்? கடவுள் வழிபாட்டினை பெருமையாய் பேசிக் கொள்ளும் ஆன்மீக முற்றல்கள் எனக்கு எப்படி குருவாக முடியும்? காழ்ப்புணர்ச்சிகள் கொண்ட மனிதர்களும், தன்னை மற்றவரிடம் இருந்து மேலானவராய்க் காட்டிக் கொள்ள விரும்பும் மனிதர்களையும் நான் பின்பற்றினால் வேறு ஒரு மனிதருக்கு நான் கதாநாயக வடிவம் கொடுத்து ரசிக மனோபாவத்தில் அல்லவா கைதட்டி போற்றலையும் தூற்றலையும் செய்ய வேண்டும்.

எனக்கு மட்டுமே சக்தி இருக்கிறது. நான் உங்களை விட சிறப்பானவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை எப்படி நான் குருவாய் ஏற்றுக் கொள்ள முடியும்? நான் எந்த கட்டுப்பாடுகளுக்குள்ளும் போக விரும்பாதவன் ஆதலால் நிறைய அமைப்புகளை, வழிமுறைகளை, காலை மாலை வழிபாடுகளை, நிர்ப்பந்திக்கப்பட்ட மதம் சார்ந்த கோட்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு சுதந்திரப் புருசன். விதிமுறைகளுக்குள் வாழ முடியாத ஜனனம் என்னுடையது. என்னை பேருண்மைக்குக் கூட்டிச் செல்லும் குருவே எங்கிருக்கிறீர் நீர்? உம்மைச் சுற்றி கோடி பேர்கள் இருந்து கொண்டு புகழ்பாடுவது போல என்னால் இருக்க முடியாது? ஆனால் மானசீகமாய் என்னை உங்களுக்குச் சமர்ப்பணம் ஆக்கிக் கொள்வேன். உங்கள் வார்த்தைகள் என்னை வழிநடத்தட்டும். உங்கள் ஞான வெளிச்சத்தில் எனக்குள் இருக்கும் அஞ்ஞான இருட்டு அகலட்டும். புறத்தில் கதாநாயகத் துதி செய்யும் மனோபாவம் அற்ற எந்த வசீகரமும், புனைவுமற்ற கரடுமுரடான பாறை நான். என்னை இப்படியே தூரத்தில் நிறுத்தி வைத்து உம்முடைய மெளனத்தால் எனக்கு தீட்சை கொடும் குருவே...

என்னை ஏன் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் ஒரு சிறுபிள்ளையாய் பெரு மைதானத்தில் ஓடச் செய்யும் ஐயனே. எனக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை எனக்கு பாடமாக்கு...., என் காயங்களை ஆழப்டுத்து, வலிகள் இரணமாய் என் உயிர் வரை பாயட்டும். வலித்து வலித்து அதில் லயித்து லயித்து நான் மீண்டெழுந்து கொள்கிறேன். என்னை வழி நடத்துவது உமது மெளனமாய் மட்டும் இருக்க வேண்டும். நான் விழுந்தவுடன் தூக்கி என்னை எழுப்பி விட உமது கரங்கள் எனக்கு வேண்டாம் என் குருவே...., ஆனால் எழுந்து நிற்கும் என் திடத்தில் சூட்சுமமாய் நீ கரைந்து நில். இந்த பூமியின் ஏதோ ஒரு பாகத்தில் நீங்கள் வசித்துக் கொள்ளுங்கள் என் குருவே, உங்களை பார்க்காமலேயே கூட நான் இருந்து கொள்கிறேன். உங்கள் அர்த்தம் இல்லாத, அழுத்தம் இல்லாத, எதுவுமற்ற வார்த்தைகள் என்னை வழி நடத்தட்டும். இந்த பூமிப்பந்து முழுதும் நீங்கள் வீசி எறியும் அன்பு பூக்கள் என் மீது விழும் பாக்கியம் இருந்தால் மட்டும் போதும் எனக்கு...

அப்படியான குருவை நான் தூர இருந்து பார்த்தாலே போதும். நான் என்னும் என் தன்முனைப்பை, எனது அன்பை, எனது காதலை, அவர்பால் நான் கொண்ட நேசத்தை, அவரிடம் சமர்ப்பித்து விட்டு, அவரின் இருப்புத்தன்மை எனக்கு போதித்திருக்கும் சத்தியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நன்றியுணர்சியோடு நான் நகர்ந்து விடுவேன். இப்படியெல்லாம் எனக்குள் எண்ணியிருந்தது போல ஒரு குரு எனக்கு கிடைப்பார் என்று நான் முன்பு நம்பவில்லை. காரணம், துதி செய்தலை, சீடர்கள் குருவிடம் அடிபணிந்து நிற்கும் வழமையை, எங்கு சென்றாலும் குரு நாமம் சொல்லி அதை எல்லோருக்குள்ளும் கொண்டு செல்ல முயலும் ஒரு பரப்புதலை அல்லது எப்போது பார்த்தாலும் குரு என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு பரந்து விரிந்த பேருண்மையை ஒரு மட்டுக்குள் வைத்து பேசும் போக்கினைத்தான் பெரும்பாலும் நம் சமூகம் கொண்டிருக்கிறது.

என்னால் அப்படி இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சத்சங்க கூட்டம் இருக்கிறது வராமல் இருந்து விடாதே அப்படி வராமல் போனால் நல்லதல்ல என்று போதனைகள் செய்யும், மிரட்டும், என்னை ஒரு அடைப்புக்குள் வைக்கும் எந்த இடத்திலும் என்னால் இருக்க முடியாது. ஒருவேளை அப்படி அடைப்புக்குள் கட்டுப்பாட்டுக்குள் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பது குருவாக்கு அது நல்லது என்று என் மூளை சலவை செய்யப்பட்டாலும் நான் மீண்டும் எழுந்து நிற்பேன். ஏனென்றால் என்னால் ஒரு மனிதரை பிரபஞ்சமாய் காண முடியாது. மிகைப்பட்ட பேருக்கு அது எளிய வழி. 

இது எளிய வழி என்றாலும் இதில் இருக்கும் ஒரு ஆபத்து என்னவென்றால் ஹீரோ வொர்ஷிப்பிற்குள் மாட்டிக் கொண்டு அதற்கு மேல் செல்ல முடியாமல் கடைசிவரை சீட மனோபாவத்தில் கற்றுக் கொடுக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தோடே துவைதியாகவே மரித்துப் போவது ஆனால் அடிப்படையில் நான் அத்வைதி. அத்வைதமே சத்யம் என்று உணர்வுப் பூர்வமாய் நம்புபவன். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க நமக்கு ஒருவர் வேண்டும். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் கற்றுக் கொடுத்தவர் மீதிருக்கும் அன்பு மாறாது. அவரைப்பற்றி நாம் எப்போதும் நினைப்போம். அவர் இல்லை என்றால் என்னால் சைக்கிள் ஓட்டியிருக்கவே முடியாது என்றில்லை என்றாலும் அவரைப் போல சொல்லிக் கொடுத்திருக்க வேறு யாராலும் முடியாதுதான். எவ்வளவு வாஞ்சையாய், எவ்வளவு அன்பாய், துல்லியமாய், தலை தடவி, நெஞ்சு தடவி எனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தார் அவர்.

சைக்கிள் தன்னிச்சையாய் ஓடிக் கொண்டிருக்கும் நான் ஓட்டிக் கொண்டிருப்பேன். எனக்கு கற்றுக் கொடுத்த குரு என்னுள் அன்புப் பிரவாகமாய் இருக்க நான் பெரும் நன்றியுடன் இருப்பேன் அப்போது. இது இது இது.... எனக்கு வாய்த்திருக்கிறது இப்போது. இங்கும் அங்கும் தடுமாறி கற்று, விழுந்து, எழுந்து எந்த உறுத்துதலும் இல்லாமல் என்னுள் வானத்திலிருந்து இறங்கும் பனியைப் போல, உடல் தழுவிச் செல்லும் தென்றலைப் போல, இனிமையான இசை கொடுக்கும்  அலாதியான உணர்வு போல, கூடலின் உச்சத்திற்குப் பிறகு கிடக்கும் பிரஞ்ஞைநிறை அனுபவம் போல, இந்தத் தேதி, இந்த நாளில் , இந்த மணியில், இந்த நொடியில், இந்த கணத்தில் இந்த பூ பூத்தது என்று  எப்படி வரையறுத்துக் கூற முடியாதோ அப்படி....

என்னுள் பரிபூரணமாய் மலர்ந்திருக்கிறார்...சத்குரு ஜக்கி வாசுதேவ்.

சூட்சும தீட்சை பெற்ற பேறு பெற்றேன். அகம் ஆய்ந்து கொண்டிருக்கையில் வாஞ்சையாய் தலை தடவி கனிவாய் சிரித்த அவரின் முகம் கண்டேன். புலனுணர்வுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. கட்டுப்பாடுகளற்ற பெருவெளியில் நீ எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரி. பிரபஞ்ச நியதியை மட்டும் நினைவில் கொள் என்று அவரது விழிகள் எனக்கு சொன்னதே அன்றி வாய் திறந்து அவர் என்னிடம் எதுவும் பேசவேயில்லை. நிர்ப்பந்திக்காத அன்பு பேரின்பம். தொடர்பு இல்லாத தொடர்பு சுகமானது. வார்த்தைகளில்லாத உரையாடல் பெருங்களிப்பானது. பாலகுமாரன் என்னும் எழுத்துப் பிரவாகம் என்னை வழிநடத்திச் சென்றது. இதோ இன்று ஏதோ ஒரு பெருங்கடலில் விழுந்து கிடக்கும் நிலையில் விழிகள் பெருகி ஓட....

இப்போது பிறந்த பிள்ளையாய் வாஞ்சையோடு சத்குருவின் ஆட்காட்டி விரலை என் பிஞ்சுக் கைகளால் பற்றிக் கொள்கிறேன்.


சத்குருவே நமஹ...!!!!!!!!! குருவருள் என்னை இனி வழிநடத்தும்.....



தேவா சுப்பையா...




Comments

ஈசா வில் நிறைய விதிமுறை மீறல்கள் ன்னு சவுக்கில ஒரு கட்டுரை வந்ததே படிச்சிங்களாண்ணா ...! ஒரு முறை நேரில் போயிருக்கிறேன் எனக்கென்னமோ ஷாப்பிங் போயிட்டு வந்த மாதிரி ஓர் உணர்வு ....!
dheva said…
சரியா தவறா என்ற ஆராய்ச்சியையும், ஈசாவில் திரளும் கூட்டமும், அவர்கள் குருவிற்கு அன்பு என்ற பெயரில் காட்ட முயலும் துதிகளும் நான் தூர நின்றே பார்க்கிறேன் தம்பி.

ஈசாவிற்கு நான் போனதில்லை. போவேன். எனது நோக்கம் எதுவுமற்றது. பணம் கொடுத்து ஆன்மீகம் கற்றுக் கொள்ள நிறயைய தனவந்தர்கள் இருக்கிறார்கள். சத்குரு அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் தவறும் கிடையாது. அவரால் இயன்ற அளவு ஞானத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்.

காற்றில் அவர் விதைத்த பல விதைகள் பறந்து எங்கெங்கோ போய் விழுகின்றன. எனக்குள் இருக்கும் விதை வேறு யாரோ விதைத்தது ஆனால் சத்குருவினால் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

நேரடியாய் எந்தவித கற்பனைகளும் இல்லாமல் சத்குரு என்னும் பேரான்மாவின் யாக்கை எது என்று உணர முடிந்தது. அவர் பயணம் எவ்வளவு சத்தியமானதோ...

அதே போல என் பயணமும் சத்தியமானது. சத்குரு வழிகாட்டுகிறார். நேரடியான எந்த புலன் அனுபவமும் இல்லாமல் நான் அந்த வழிகாட்டுதலில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
நல்ல கட்டுரை...
அழகான எழுத்து நடை...
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த