Skip to main content

வேங்கைகளின் மண்...5!






இனி....


ஆடிக் கொண்டே இருந்த வீரமுத்தானந்தம் விடு விடுவென்று கொல்லன்குடி காட்டிற்குள் ஓட ஆரம்பித்தார். உச்சிவெயில் மெலிதாய் சாய ஆரம்பித்திருந்த அந்தப் பொழுதில் ஒரு மோனநிலையில் மெளனமாய் படுத்துக் கிடந்த காடு மெல்ல கண் விழித்து வீரமுத்தானந்தத்தின் ஓட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தது. கருவேல மரங்களும், சிறு ஈச்சைப் புதர்களும் மண்டிக்கிடந்த அந்தக் காட்டிற்குள், பூவரசு, மா, வேப்பம், உதயன், ஆலம், அரச மரங்களோடு பேய்ப் புளிய மரங்களும் நிறையவே இருந்தன. புளியமரத்தை மட்டும் ஏன் பேய்ப்புளியமரம் என்று சொல்கிறார்கள்...? இரவினில் எல்லா மரங்களும் ஏதோ ஒரு சீரில் நின்று கொண்டிருக்க புளியமரம் மட்டும் தலைவிரித்து நிற்கும் பிரம்மாண்ட பிசாசைப் போல இருக்கிறது. புளிய மரத்தின் வடிவத்தை உற்று நோக்கினாலே இது பிடிபடும். வளைந்து நீண்டு இருக்கும் கிளைகள் எல்லாம் கோரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் முரட்டுக் கரங்களைப் போல இருக்கும். ஆழமாய் வேரூன்றிய வயதான புளியமரம் தளர்ந்து போன ஒரு மூதாட்டியைப் போல கிளைகளைத் தாழ்த்தி கிடக்கும். 

கொல்லன்குடி காட்டிற்குள் எவ்வளவு புளியமரங்கள் இருந்தனவோ அதைவிட நான்கு மடங்கு அதிகமாய் பனை மரங்கள் இருந்தன. பனை மரத்தையும் தமிழர் வாழ்க்கையையும் பிரித்துப் போட்டு விட முடியாது. ஒவ்வொரு பனை மரமும் தன்னை முழுமையாக மனிதனுக்கு ஒப்புக்கொடுப்பதற்காகத்தான் விதையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு விழித்தெழுகின்றன. வீரமுத்தானந்தம் காடு மேடுகளைத் தாண்டி முழங்கால் வரை ஓடிக் கொண்டிருந்த ஒரு காட்டாற்றை பிளந்து கடந்து அந்த பனங்காட்டிற்குள் ஓடி அங்கே கள் விற்றுக் கொண்டிருந்த ஒரு பனை மரத்தடியில் போய் நின்றார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற சித்தரைப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. கண்கள் இரண்டும் சிவந்து போயிருக்க நெஞ்சு வரை வளர்ந்திருந்த தாடியும் விரித்துப் போட்ட தலையும், இடுப்பில் கோவணமுமாய் நெஞ்சு நிமிர்த்தி இடுப்பில் கை வைத்து....மிரட்டும் விழிகளுமாய்…

டேய்ய்ய்ய்……கருப்பா….ஊத்துடா எனக்கு கள்ள  என்ற சித்தரின் சப்தம் கேட்டு அங்கே கள் குடிக்கக் கூடியிருந்த கூட்டம் திகைப்புடன் திரும்பிப் பார்த்தது. ஒரு வெட்டப்பட்ட பனை மரத்தின் தூரில் ஒற்றைக் காலைத்தூக்கி வைத்து இன்னொரு காலை அழுத்தமாய் தரையில் ஊன்றியபடி கர்ஜித்த சித்தரைப் பார்த்தவுடன் அங்கே கள் குடித்துக் கொண்டிருந்த கூட்டம் சித்தரை நோக்கி ஓடி வந்தது. 

"அடேய்...கொல்லங்குடிக்கு புறத்தாடி ஒரு காடு இருக்குல்ல.. அந்தக் காட்டுல நிறைய எருக்கஞ்செடியிருக்காமுடா, எங்குட்டுப் பாத்தாலும் எருக்கம், கருவிளை, காந்தளு பூவாத்தான் இருக்குமாம். அங்க ஒரு சாமியாரு சுத்துறாராம்டா... யாரு கண்ணுலயும் அவர காங்க முடியாதாம் எப்பவாச்சும் பனங்காட்டுக்குள்ள ஓடியாந்து கள்ளு விக்கிறவக கிட்ட டேய்ய்ய்......... கள்ளு ஊத்துடா பேப்பலேன்னு கத்துமாம் அந்த சாமி, சில பேரு அப்படி ஒரு சாமியாரு இல்லேன்னும் சொல்லுறாக; என்னிக்காச்சும் ஒரு நாளு பனங்காட்டுக்குள்ள போயி அந்த சாமிய பாத்துபுடனும்டா நாம…., சாமியாரு சுத்துற அந்த காட்டுக்குள்ள குருக்கத்திப்  பூ நிறைய நிறைய வெளைஞ்சு கிடக்காம்டா…..அதனால் சாமிய குருக்கத்திச் சாமின்னு சொல்லி எங்கப்பத்தா வானத்தை பாத்து கையெடுத்து கும்பிடும்டா….


கள் குடித்துக் கொண்டிருந்த வேலுச்சாமிக்கு சடாரென்று அவன் கூட்டாளிமார்கள் சிறுவயதிலிருந்து கதையாகச் சொன்ன அந்த சாமியாரின் நினைவு வந்தது…. திகிலாய் குருக்கத்திச் சித்தரான அந்த வீரமுத்தானந்தம் சாமியை பார்த்தபடி அங்கே கள் குடித்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் முன் மண்டியிட்ட்டது….

ஆதியில் நானிருந்தேன்…
அப்போ  எந்தச் சாதியில் நானிருந்தேன்....?
நாதியில்லாதவன் நான்…
பாதியாய் நின்னவன் நான்…
அடேய்…..ஆதியில் நானிருந்தேன்…
அப்போ எந்தச் சாதியில் நானிருந்தேன்….?

குருக்கத்திச் சித்தர் ஒரு கால் தூக்கி தடங் தடங்கென்று தரையில் ஓங்கி ஊன்ற அங்கே செம்மண் புழுதி பறந்தது. உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாட கொல்லன்குடி காடு உடுக்கை ஒலியால் அதிரத் தொடங்கியது. சாமியின் கையில் ஒரு கொட்டாங்குச்சி கொடுக்கப்பட்டதும்….ஊத்துடா கள்ள…என்று கட்டளையிட்ட சித்தரை பணிந்தபடியே கள் அந்தக் கொட்டாங்குச்சியில் ஊற்றப்பட்டது. மடக் மடக் என்று கள்ளைக் குடித்த சாமிக்கு மீண்டும் மீண்டும் கள் கொடுக்கப்பட்டது. கள்ளை குடித்த சித்தர் அவர் நின்று கொண்டிருந்ததற்கு அருகே இருந்த ஒரு ஈச்சம் புதர் ஓரமாய் கால் மேல் கால் போட்டு தரையில் அமர்ந்தார். கள் குடிக்க வந்த கூட்டமும் கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களுமாய் இருபது முப்பது பேர்கள் சித்தர் சாமியைச் சுற்றி வட்டமாய் அமர்ந்தனர்.

எல்லோருக்கும் தரையில் கிடந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசத் தொடங்கியது சித்தர் சாமி. 

மண்ணுல வந்த பூமி இது….
மண்ணுல வந்த சாமி இது….என்று பாடிக் கொண்டே சாமி என்று கூட்டத்தை கை காட்டினார் சித்தர் சாமி. தமிழர் வரலாற்றில் இல்லாத புகுத்தப்பட்ட சாதிக்குள் அகப்பட்டுக் கொண்டு தாழ்த்தப்பட்ட இனத்தவராய் அடக்குமுறை செய்யப்பட்ட மனிதர்கள் அங்கே நிறைய இருந்தார்கள் அவர்கள் எல்லாம் சாமி என்று சித்தர் சாமி தங்களை கைகாட்டுவதைப் பார்த்து திகைத்தார்கள் ஒரு சிலர் ஐயா….நாங்களாயா சாமி…? எங்களயா சாமி சாமின்னு சொன்னீக…என்று ஏற்கெனவே குடித்திருந்த கள் போதை மிகவும் உணர்ச்சி வசப்பட வைக்க… பெருங்குரலெடுத்து அழுது அரற்றியபடியே….கேட்டனர்….

குருக்கத்திச் சித்தர் சப்தமாய் சிரித்தார். எங்கடா இருக்கு இங்க சாமி…? சுத்தி சுத்தி மனுசப்பயலுகளும், மிருகங்களுமா சுத்தி கிட்டு இருக்கீக…? எப்படா வந்துச்சு சாமி…? இருக்கறதுதானே சாமி..? ஏண்டா… மக்கா…? இருக்கறதுதானே சாமி….? சாமின்னா இருக்கணும்லா….டா சண்டாளப் பயலுகளா…. சாமின்னு சொன்னா அது இருக்கணும்லடா…? 

குருக்கத்திச் சித்தர் அதட்டிக் கேட்டார்.  கூட்டம் ஆமாஞ்சாமி….சாமின்னா அது இருக்கணும் என்று பதில் சொன்னது. ஆடு இருக்குது, மாடு இருக்குது, கோழி, கொக்கு, குருவி இருக்குது, புழு இருக்குது, பூச்சி இருக்குது, காடு இருக்குது, என்ன பெத்த அய்யாக்களா கடலு இருக்குது, மலை இருக்குது… வானம் இருக்குது, நிலா இருக்குது…..கூடவே மனுசப்பயலுக நாமளும் இருக்குறோம்….

எதுடா சாமி இப்ப சொல்லுங்க…? குருக்கத்தி சித்தர் கைய விரித்து வானத்தைப் பார்த்து ஹோ....... என்று கத்தினார். அந்தப் பாமரக் கூட்டம் புரிந்தும் புரியாமல் 'ஓ'வென்று ஒப்பாரி வைத்து அழுதது. குருக்கத்திச் சித்தர் அழும் கூட்டத்தைக் குரு குருவென்று பார்த்துக் கொண்டிருந்தார். உச்சியிலிருந்த சூரியன் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி வழுக்கிக் கொண்டிருக்க…

பாவி மக்கா….ஏன்டா அழுகுறீக….? இன்னும் அழுக வேண்டியது நிறைய இருக்கு. நம்ம சீமைய முழுசாப் பிடிக்க வந்துருக்காய்ங்கடா வெள்ளைக்காரங்க….அவைங்களால சீமை உருளப்போகுது… நம்ம சனமெல்லாம் மிரளப் போகுது….அப்ப அழுதுக்கங்கடா உங்க அழுகைய எல்லாம்….எக்காளமிட்டு சிரித்தபடி குருக்கத்திச் சித்தர் சொன்னதை கேட்டு கூட்டம் இன்னும் சப்தமாய் ஓலமிட…


அடிமருங்கி னரசிறைஞ்ச
     வாழியாள்வான் பெருந்தேவி
கொடிமருங்கி னெழில்கொண்டு
குழையல்வாழி குருக்கத்தி
கொடிமருங்கி னெழில்கொண்டு
     குழைவாயாயிற் பலர்பறிப்பக்
கடிமருங்கிற் புக்கலரே
     காண்டிவாழி குருக்கத்தி…..

என்று சப்தமாய் சங்ககாலப் பாடல் ஒன்றைப் பாடியபடியே பனங்காட்டிற்குள் சென்று குருக்கத்திச் சித்தர் மறைந்த அதே நேரத்தில்….

மன்னர் முத்துவடுக நாதரும் ராணி கெளரி நாச்சியாரும் காளையார் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். மன்னரின் உத்தரவின் பேரில் அவரது காளையார்கோயில் வருகை வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. மன்னர் ஒரு குதிரையிலும், கெளரி நாச்சியார் ராணி ஒரு குதிரையிலும் ஏறி கொல்லன்குடி அரண்மணையை விட்டு வெளியே வந்து வழக்கமாய் எல்லோரும் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கொல்லன்குடி காடு வழியே மாற்று வழியாக காளையார்கோயில் நோக்கி நகரத்தொடங்கினர்

சிறிது நேரப்பிரயாணத்துக்குப் பிறகு அந்தப் பனங்காட்டிற்குள் திருப்பணும் உதயணனும் முன்னே செல்ல அவர்களுக்குப் பின்னால் மன்னரும், அரசியும் செல்ல அவர்களுக்குப் பின்னால் மன்னரின் இரு மெய்க்காப்பாளர்களும் அவர்களுக்குப் பின்னால் மாணிக்கம் சேர்வையும், செல்லமுத்துவும் சென்று கொண்டிருந்தனர்......

எப்போதும் இல்லாத அளவு ஒரு பெரும் மெளனம் அங்கே நிலை கொண்டிருந்தது.....


(புரட்சி இன்னும் வெடிக்கும்...)




தேவா சுப்பையா....









Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல