நிஜத்தில் எது எதுவாக இருந்ததோ அல்லது இருக்கிறதோ அது பற்றிய யாதொரு அக்கறைகளுமின்றி தத்தமது மனதில் வரைந்து கொள்ளும் பிம்பங்களாகவே மிகைப்பட்டவர்களின் வாழ்க்கை இங்கே இருக்கிறது. நாம் வெளியே காண்பதும், அது பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்வதும், நமது சொந்த யோக்கியதையே அன்றி வேறு ஒன்றுமே அல்ல...
எதை அறிந்தோமோ
அது அறிந்ததன்று....
சத்தியத்திடம் போதனைகளென்றே
ஒன்று இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
வெகுளியாய் பூத்துச் சிரிக்கும்
பூக்களிடம் சொல்வதற்கு மலர்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லைதானே....?!
மலர்தலும்...காய்ந்து சருகாகி வீழ்தலும்
முழுமையில்தானே நிகழ்கிறது...?
யார் எழுதி வைத்தார்கள்...
இந்த வாழ்க்கைச் சமன்பாட்டை...
இது இது இப்படித்தான் என்று
ஏதேனும் விதி ஒன்று இருக்கிறதா என்ன
இந்த இயற்கை பெரும் இயக்கத்தில்...?
வாழ்க்கை மீதிருக்கும் ப்ரியத்தைதானே...
பொழுதெல்லாம் கூவிக் கொண்டிருக்கின்றன
வனத்துக் குயில்கள்...?
சலசலப்போடு ஓடாவிட்டால்...
ஓடையென்று கூறுவீர்களா அந்த
நீர் தேக்கத்தை...?
கடும் வெயிலுக்குப் பிறகான
அந்தியில் நதிக்கரையோரம் வீசும்
தென்றலை மலர்ச்சியோடு முகம் குளிர வாங்கிப் பாருங்களேன்...
அப்போது.... தெரியும்...
வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா... இல்லையா என்று...?!
பெருமழை பெய்வது போல இடித்துப் பெய்தே விடாதா...
அபிப்ராயமற்ற வாழ்க்கை நமக்குள்ளும்....?
தேவா சுப்பையா...
Comments
அழகு...