அது காலத்தை தின்று விடுகிறது
சுற்றியிருப்பவர்களுக்கு புரிதலின்மையைக் கொடுக்கிறது
வலியோடு நகர வைக்கிறது
வார்த்தைகளைக் கொன்று விடுகிறது;
பதுங்கித் திரியும் அடிபட்ட புலியின்
கொடூரத்தோடு பாய்வதற்கான தருணத்தை
அது எதிர்பார்த்து காத்திருக்கிறது;
மீளல் ஒரு வேள்விதான்
அது எலும்புகளைத் துளையிட்டு
ரத்தத்தை உறிஞ்சி
நரம்புகளை அறுத்தெறிந்து
தடாலென்று கீழ் தள்ளி விடும் போதுதான்
விழுந்த இடத்திலிருந்து நாம்
எழுந்து விஸ்வரூபமெடுக்க வேண்டியிருக்கிறது
மீட்சி அல்லது மீளலென்பது
காலம் கையளிக்கும் இடைநிலைச் சூழல்தானென்றாலும்
மீளும் வரை மீண்டு கொண்டிருப்பவன்
பாவிதான், துரோகிதான்;
மீளல் ஒரு சூழ்நிலை மாற்றிதான்
அது மீளும் வரை
இடதை வலதாக காட்டுகிறது
வலதை இடதாகவும் மேலைக் கீழாகவும்
கீழை மேலாகவும் காட்டிக் கொண்டேஇருக்கிறது...
மீள்பவனை ஊமையாக்குகிறது;
மீள்பவனின் வார்த்தைகளிலிருக்கும்
சத்தியமென்பது விழலுக்கிறைத்த
வெற்று நீர்தான்...
ஆனாலும்...
மீளலொரு நாள் தன்னை
மீட்டெடுத்துக் கொள்கிறது
கூட்டுப் புழுவினை உடைத்து
சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியென என்றாலும்
மீளும் வரை கூட்டுப் புழுவின்
அவஸ்தையோடுதானிருக்க வேண்டியிருக்கிறது...
ஆமாம்....
தூரிகையும் வர்ணக் கலவையும் மட்டும்
என்ன புரிதலைக் கொடுத்து விடும்
காண்பவர்களின் கண்களுக்கு....
தீட்டி முடியும்வரை
அது ஓவியமல்ல....
வெற்று வர்ணங்களின்
குழப்பக் கலவைதானே...?!
தேவா சுப்பையா...
Comments