Skip to main content

யாகத் தீ...!


நான் எழுதிய கவிதைகளை எல்லாம் நீ இப்போது வாசிக்கிறாயா? ஒரு வெறுப்போடுதான் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லாமல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே நானும் அலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்தமில்லாத அந்த நிமிடங்களை சடக்.. சடக்...சடக் என்று மென்று விழுங்கிய படியே காலம் ஓடிக் கொண்டிருந்ததை பற்றிய பிரக்ஞை எனக்கு அறவே இல்லாதிருந்தது போலத்தான் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும்...

சடாரென்று என்னைப் பார்த்தாள்...கலைந்த கேசத்தைப் பற்றிய யாதொரு அக்கறையுமின்றி என்னை அவள் அப்படி ஊடுருவிப் பார்த்தது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது...

நீ ஏன் எதுவுமே எழுதுவது இல்லை இப்போதெல்லாம் என்று அவள் கேட்டது, சடலத்திடம் போய்  ஏன் இறந்து கிடக்கிறாய் என்று கேட்பதைப் போலவே தோன்றியது எனக்கு. நான் எழுதுவதில்லைதான் ஆனால் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை...

ஒவ்வொரு இறகாக பிய்த்துப் போட்டு விட்டது காலம். நான் முன்பு போல தோகை விரிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத்  தெரியவில்லை. அகங்காரத்துக்காக எந்த மயிலும் தோகை விரிப்பதில்லை அது அழகியலின் வெளிப்பாடு. இருந்தாலும் அது சிலரால் அகங்காரமாய்த்தான் பார்க்கப்படுகிறது. கவிதைக் கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்க முடியாது என்று முன்பொரு நாள் நான் உன்னிடம் சொன்னேன் அல்லவா...?

அவளைப் பார்த்து கேட்டபடியே தொடர்ந்தேன்....

என் காதலும், கவிதைகளும், ஏகாந்த எண்ணங்களும் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவிலிருக்கிறது, பிழைக்கலாம் இல்லையேல் அப்படியே மரித்துக் கூட போகலாம். என் கனவுகளில் கூட என்னால் கவிதைகள் பற்றி எண்ண முடிவதில்லை... கோமாவில் இருப்பவனுக்கு எப்படி வார்த்தைகள் வேர்ப்பிடிக்கும், வெற்று ஓட்டைகளைக் கொண்ட மூங்கில் குச்சியா ஜீவனுள்ள இசையைப் பிறப்பிக்கிறது....?

புல்லாங்குழல் மட்டுமல்ல எந்த வாத்தியக்கருவியுமே இசையைப் பிறப்பிப்பதில்லை. இசை, எழுத்து, ஓவியம், இன்ன பிற படைப்புகள் யாவுமே யாரோ ஒரு கலைஞனின் காலம் கடந்த எண்ணங்களின் பிரதிபலிப்புதான். 

அவள் எதுவும் பேசாமல் மீண்டும் கடலை வெறிக்கத் தொடங்கி இருந்தாள்....பின் சற்று நெருக்கமாக என்னருகே வந்து அமர்ந்தாள், என் தலையை அவள் தோளில் சாய்த்துக் கொண்டாள், ஆதரவாய் கரங்களைப் பற்றிக் கொண்டு.... எனக்கு உன் வாழ்க்கை என்னவென்று தெரியாது ஆனால் நீதான் என் வாழ்க்கை என்பது மட்டும் தெரியுமென்றாள்....

உள்ளுக்குள் துளிர்த்துக் கொண்ட ஏதோ ஒன்று என் விழிகளில் கண்ணீராய் எட்டிப் பார்க்க, அவள் கரங்களால் என் கண்ணீரைத் துடைத்தெறிந்தாள்.....

மீண்டும் அவள் கைகளை இறுக்கிக் கொள்ள...

வாழும் வரை காதலை எழுத வேண்டிய நிர்ப்பந்தமொன்று என் முன் கடலாய் விரிந்து கிடப்பதாய் எனக்குத் தோன்றியது....

காற்றில் பறந்த
அவளின் தலை கோதி
கன்னங்களை கைகளில் ஏந்தி
என் உயிருக்குள் ஏறிக் கொள் 
தேவதையே... என்றேன் மெளனமாய்!

அவள் விழிகளால் என் விழிகளைத்
தொட்டு தொட்டு
அவள் தீட்சைக் கொடுக்க....
முன்பொரு நாள்
அவள் பாதங்களில் நான்
தூவிய என் எழுத்துப்பூக்கள்
மோட்சமைடைந்தோம் 
உன் தேவதையின் பாதம் தொட்டு
என்று கண் சிமிட்டிக் கிசு கிசுப்பாய்
சொன்னதெல்லாம் உறக்கம் கலைந்து
தூளி எட்டிப்பார்க்கும் குழந்தையாய்
என் நினைவுகளிலிருந்து எட்டிப்பார்க்க
காதலாய் அவளைப் பார்த்தேன்...

அவளின் இடையில் பதிய முயன்ற
என் விழிகள் ஆயிரத்தோராவது முறையாய்
வழுக்கி விழுந்து
மீண்டும் ஒரு கிணற்றுத் தவளையாய்
அவளின் இடுப்பேற முயன்று கொண்டிருக்க...
ஒரு சிறு மழையொன்று
செல்லமாய் அவள் முன் நெற்றி விழுந்து
என்னை நகர்ந்து போ 
என்று மிரட்ட....

கற்பனைகளை எல்லாம் குவித்து
எனக்குள்ளிருக்கும்
அவளுக்கான கவிதைகளை
தரையிறக்க
இதோ எனக்குள் மூண்டு கொண்டது
மீண்டுமொரு யாகத்தீ...!




தேவா சுப்பையா...







Comments

யாகத் தீ மூளட்டும்...
கவிதைகள் மலரட்டும்...!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல