எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்...
ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது. விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...? சிம்புவின் பாட்டாச்சு அவர் வீடாச்சு அதைக் கேட்கும் அவரது உறவுகளாச்சு என்று வழக்கப்படி தன் தொடர் வேலைகளைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்திருப்பார்கள் மக்களும்.
அவர்களுக்கா வேலை வெட்டி இல்லை...?
நேரமிருந்தால் சமூக இணைவு தளங்களுக்குள் எப்போதாவது எட்டிப் பாருங்கள் இணையம் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் எவ்வளவு அவசரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று? தினம் தினம் எதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தெருவில் யாரோ இருவர் அடித்துக் கொள்ள நம் மண்டையா அதில் உடையப்போகிறது? எவன் மண்டையோ எங்கோ உடைந்தால் சரிதான் என்ற சமூக பக்குவத்தோடு வெகு சிரத்தையான பாதுகாப்புணர்வோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எம்பி, எம்பி இவர்கள் கம்பு சுற்றும் லாவகத்தை பார்க்கவேண்டும் நீங்கள். அன்றாட இணைய உலாவிகள் சராசரியாய் தங்களுக்கு எத்தனை லைக்குகள் எட்டிப்பார்க்கின்றன என்ற தொடுபதத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் சமூகப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞையையே தொழிலாய் செய்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரர்களுக்கும், சாருக்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...
அள்ள அள்ளக் குறையாத வைரம் போல நித்தம் நித்தம் நிகழும் சமூக நிகழ்வுகள்தான் இவர்களுக்கு தீனியே. எது நடந்தாலும் அதில் தன் கருத்தை சொல்லியே தீர்வது என்ற தீர்மானத்தோடுதான் இவர்களெல்லாம் பிறந்திருப்பார்கள் போலும்...? அடித்துப் பெய்த மழையில் ஆதரவாய் நின்ற மனிதர்களைப் பற்றி சொல்லிச் சிலாகித்துக் கொண்டிருந்த எல்லோரும் சடாரென்று தாவிக்குதித்து சிம்புவின் சொம்பு பாட்டை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஆலமரமாய் பார்த்து தேடி அமர்ந்து ஆளுக்கொரு கவுலி வெற்றிலையை வாங்கிப் போட்டு குதப்பியபடி நாட்டாமையாய் நர்த்தனம் ஆடத் தொடங்கிய பொழுதில் வெளுக்க ஆரம்பித்திருந்தது சென்னையின் வானம்.
சிம்புவைப் பற்றி வந்த நிறைய விமர்சனங்களையும் கண்டனக்கட்டுரைகளையும் படித்து கடந்து கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்தே விட்டேன் நவீன புத்தபிரான் சாருநிவேதாவின் வெருண்ட கோபக்கட்டுரையைக் கண்டு. அவர் வயது வந்தவர்களுக்காக மட்டும் ஆபாசங்களை எழுதித்தள்ளுவாராம் அதனால் சமூகத்தில் ஒரு பாதிப்பும் வராதாம், அவர் வயது வந்தவர்களைப் பார்த்து ஆபாச விமர்சனங்களை வைப்பாராம் அதனால் சமூகம் இன்னும் நன்றாய் வளர்ந்து மேலேறி வருமாம்.... அய்யோ பாவம் அவரால் சிம்புவின் பாடலைக் கேட்டுவிட்டு தாங்க முடியவில்லையாம், அவருக்கு கோபம் கோபமாய் வந்ததெல்லாம் சரிதான் என்றாலும் அவர் வீசிய கல்லில் பாவம் டன் கணக்கில் இருந்ததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சிம்புவாகட்டும், சாருவாகட்டும் தத்தமது வெளி என்று ஏதேதோ ஒன்றை தாங்களாகவே வரையறை செய்து வைத்துக் கொண்டு நீதிகளை தங்கள் வீட்டு முற்றத்தில் கட்டும் நாயைப் போல பாவிக்கும் பாங்கினை நினைத்தால் உவ்வ்வ்வே என்று குமட்டிக் கொண்டுதான் வருகிறதெனக்கு. சிம்பு விவகாரத்தில் சிம்புவை விட நான் நினைத்துப் பரிதாபப்படுவது அவரது அப்பா டி.ஆரைத்தான். பாவம் மனுஷன் தனி மனிதனாய் நின்று பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எதிர்த்து நின்று இசையமைத்து, பாட்டெழுதி, கதையெழுதி அதில் கண்ணியமாய் நடித்து, இயக்கி அப்ப்பப்பா....இன்றைக்கு வளர்ந்து நிற்கும் தலை, தளபதி ரசிகர்களின் காலத்தில் அவர் காமெடியனாய் பார்க்கப்பட்டாலும்...
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது....
என்றெல்லாம் பாடி எழுதி கண்ணியமாய் நேற்று வரை மகன் செய்த தவறுக்கு தாய்க்குலங்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளியில் கண் கலங்குகிறார் அவர். தகப்பனின் உழைப்பால் கிடைத்த புகழையும், அவரால் கிடைத்த மரியாதையையும், கற்றறிந்த கலையையும் எந்த அளவுக்கு தவறாக கையாண்டிருகிறோம் என்பதை சிம்பு உணரவேண்டும். பெண்களைப் பற்றி விமர்சித்து எப்போதும் தன்னை ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொள்ளும் சிம்புவின் தாறுமாறான எண்ணங்களுக்கும் தான் தோன்றித்தனத்திற்கும் காலம் சரியான கடிவாளத்தைப் போட்டிருக்கிறதுதானென்றாலும்....
இதையெல்லாம் கடந்து வந்த பின்னர் தெளிவான மனிதராய் தன் தந்தையை போல தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிம்பு இருந்தால் சரிதான்...!
தேவா சுப்பையா...
Comments
Also, TR still talks we should punish the guy who stole (???) the song, which in the end can turn out to be Simbu. TR is an A****le as much as Simbu or the other way around.
டி.ஆர். இப்போது பேச்சால்தான் தன்னைக் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் வாழ்க்கையில் சிறந்த மனிதர்தான்... அவரைப் போல் அவர் பிள்ளை இல்லாதது வருத்தமே...
இனியேனும் சிம்பு திருந்தட்டும்.