Skip to main content

இதன் பெயர்தான்(னா) காதல்..?!


பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப்
போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற பித்தமிகு நிலையில் தன்னிலை மறந்து, புறச்சூழல் மறந்து... இதோ...இவள் தான் என் தேவதை, இவள்தான் என் வாழ்க்கை, இவளின்றி ஏதும் நகராது என் வாழ்வில், இவளே எனது வாழ்வின் ஆரம்பம், இவளே என் வாழ்வின் இறுதி என்று எண்ணி எண்ணி இதயம் துடித்து எகிறி வெளியே விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஆழமான பெருமூச்சின் உஷ்ணத்தோடு நகர வேண்டும் நாட்கள்...

அது காதல், அந்த காதல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை அவஸ்தைகளையும் செய்யும்....

நள்ளிரவில் அது உறக்கம் கலைக்கும், திக்குத் தெரியாத கருவானின் தீராத தூரத்தை பார்த்தபடி தொண்டை அடைக்க, மூச்சு திணறி அது கேவிக் கேவி அழும், படுத்து கண் மூடி அவளைக் கண்ட அந்த கடைசிக் கணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து உமிழ் நீரை விழுங்கி ஆசுவாசப்பட்டு கொண்டு சிறகடித்து கனவில் பறக்கும். அப்பப்பப்ப்பா....இவள் இமைகளுக்குள் இருப்பது இரு விழிகளா இல்லை தீக்கங்குகளா என்ற கேள்வியொன்றை கேட்டு கேட்டு அடம் பிடிக்கும் பழக்கப்படாத யானையைப் போல நகராமல் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த பெரும் இரவை மெல்ல மெல்ல கட்டி இழுக்கும். காதல் பர்ப்பதற்கு என்னவோ கனமில்லாத ஒரு பஞ்சைப் போலதான் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்... ஆனால் காதல் கொள்ளும் போதுதான் அது ஒரு கனத்த மிருகம் ஆனால் பார்க்கமட்டுமே மென்மையானது என்ற ரகசியம் விளங்கும்...

அவள் விழிகளால் புன்னகைப்பாள், உதடுகளால் உச்சரித்து உச்சரித்து உயிர் குடிப்பாள், அவ்வப்போது கேசம் ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என்று உயிரை பதற வைப்பாள், எங்கோ பார்ப்பது போல எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள், தீரத் தீர வேண்டும் என்பதை வேண்டவே வேண்டாமென்று சொல்வாள், வேண்டவே வேண்டாததைக் கொண்டு வந்து கொட்டு என்பாள், பேசாமலேயே இருப்பாள் ஆனால் தினமும் நினைவுகளில் பக்கம் பக்கமாய் பேசுவாள், கேள்விகள் கேட்டு வராத பதில்களுக்காய் வார்த்தைகளை தேடாமல் மெளனத்தால் மூர்ச்சையாக்குவாள்...ப்ரியத்தைச் சொல்லாமல் சொல்லவும், நேசத்தை கோபமாக காட்டவும் செய்வாள்...
அமிலக்கடலுக்குள் பிடித்துத் தள்ளி நெருப்பெரியும் ராத்திரிகளை பரிசளித்து விட்டு அவள் விழித்திருப்பாளா? உறங்கிக் கொண்டிருப்பாளா என்ற தர்க்கத்திற்குள் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே....

அதிகாலையில் ஐ லவ் யூ என்ற மூன்றே வாக்கியத்தில் நம்மை இன்னுமொரு அதிய தினத்திற்குள் தள்ளிவிட்டு... மீண்டும் அவளைக் காணப் போகும் அந்தக் கணத்திற்காய் கடிகார முள்ளோடு சேர்ந்து நொடிக்கு நொடி நகரும் ஒரு பேரவஸ்தையைப் பரிசளிப்பாள்.

காதலொன்றும் ஏதோ வழியில் எதிர்ப்படும் பால்ய சினேகிதனை பார்த்து சிரித்துப் பேசிச் செல்வதைப் போல எளிதானதொன்றுமில்லை, அது சுகமானதுதான் என்றாலும் வலியையும், கண்ணீரையும், ஏமாற்றத்தையும் எதிர்ப்பார்ப்பையும் போட்டுப் பிசைந்து பேரன்புக் கடலுக்குள் தள்ளிவிட்டு இனி இங்கே எதுவுமில்லை இதைத் தவிர என்றும் எண்ண வைப்பது...வாழ்க்கையின் எல்லாப் பொழுதுகளையும், எல்லாப் பருவங்களையும், போதும் போதுமெனுமளவிற்கு வானத்தையும் மேகத்தையும் நிலவினையும், இன்னபிற வாழ்வின் அத்தனை அழகியலையலையும் தன் அடையாளமாக்கிக் கொண்ட காதலென்ற ஒன்றின் ஆதி முத்திரையோடுதான் முடிச்சிட்டுத் தொடங்கியத் இந்த ராட்சச வாழ்வு...

அடிப்பெண்ணே..
சுறாவளியாய் என்னை சுழற்றி 
அடிக்கும் இந்தக் கொடூரக் காதலையா
உன் கருணைமிகு விழிகளிலிருந்து
பிரசவித்து எனக்கு பரிசளித்தாய்...?

இரக்கமில்லாமல் என்னுள் அரற்றிக் கொண்டிருக்கும்
அத்தனை நினைவுகளையும் பெயர்த்தெடுத்து
உன் முன் கவிதையென்று மொழிபெயர்து வைத்து விட்டு
மண்டியிட்டுக் கிடக்கும் இந்த உணர்வுகளை,
விவரிக்க முடியாத என் கனவுகளை....,
நீ பட்டாம் பூச்சியைத் துரத்திப் பிடிக்கும்
சிறுமியைப் போல விரட்டி கொண்டிருக்கிறாய்!

பஞ்சுப் பொதியினில் படுத்துறங்கும் தேவதையாய்
நீ என்னவோ சலனமின்றிதான் இருக்கிறாய் என்றாலும்
கடும் கனவு கண்ட கொடும் ராத்திரியில்
அலறி எழுந்து தாய் தேடும் பிள்ளையைப் போல...
உன்னையே மீண்டும் மீண்டும்
தேடி வரும் என் நினைவுகளை...
என்ன செய்வதென்றறியாமல்தான்...
இதோ இந்த வார்த்தைகளை எல்லாம் 
நான் கடந்து கொண்டிருக்கிறேன்...
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்....




தேவா சுப்பையா...






Comments

அப்பப்பா.... அண்ணா என்ன எழுத்து...
காதல்...அவள் மீண்டும் மீண்டும் மீண்டுமாய் உயிர்த்தெழுந்தாள்...
அருமை.. அருமை...
காதல் கொள்ள வைக்கும் எழுத்து....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த