வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார்
சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார்,
உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார்
எந்த ஊர் போகிறேன் என்று விசாரித்தார்...
உள்ளூர் அரசியல் பேசினார்,
ஊர் முழுதும் ஒரே வெயில் என்றபடி
ஜன்னலோரம் அமர்ந்து கொள்ளட்டுமா? என்று கேட்டமர்ந்தார்
அம்மா உணவகம் நல்ல திட்டமென்றார்
மீண்டும் இந்த அம்மாவே வரக்கூடாதென்றார்
திமுகவிற்கும் என் வாக்கில்லை
இருந்தாலும் கலைஞர் திறமையானவர்தான் என்றார்
இந்த விலைவாசியில் எப்படி பிழைப்பதென்றார்?
மோடியைக் கொடுத்து வைத்தவர் என்றவர்
சொல்லிக் கொண்டிருந்த போதே...
இடத்தின் பெயரை அதட்டிச் சொல்லி
இறங்கச் சொன்ன கண்டக்டரின் குரலைக் கேட்டவுடன்
அரக்கப் பறக்க இறங்கி ஓடிப் போன
அவர்
உங்களோடு கூட வந்திருக்கலாம்
என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு பேருந்தில்..!
தேவா சுப்பையா...
Comments
இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.
http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html